அரசு நீதிமன்றங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சச்சரவை சமரசம் செய்துகொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் பேச மறுப்பதை வழக்கறிஞர் ரெங்கராஜூ ரெங்கசாமி பாலசாமி கவனித்தார். 76 வயதான திரு ரெங்கராஜூ அவருடன் தனிப்பட்ட முறையில் பேசினார். அதன்பின், அவர் சமரசப் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அதன்பின் அந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவல் சூழலில், வழக்கு விவகாரங்களில் தொண்டூழியப் பணியாற்றிய உச்ச நீதிமன்றம், அரச நீதிமன்றங்கள், குடும்ப நீதி நீதிமன்றங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 43 தொண்டூழியர்களுக்கு அவர்களது தலைசிறந்த அர்ப்பணிப்புக்காக இன்று (நவம்பர் 10) விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அவ்விருதைப் பெற்றவர்களில் ஒருவரான, திரு ரெங்கராஜூ வழக்கறிஞர்கள் பிரிவில் தலைசிறந்த நீதிமன்ற தொண்டூழியர் விருதையும் 10 ஆண்டு நீண்ட சேவை விருதையும் பெற்றார்.
34 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் திரு ரெங்கராஜூ, 2010இல் அரசு நீதிமன்றங்களின் சச்சரவுகளைத் தீர்க்கும் தொண்டூழிய வழக்கறிஞர் குழுவில் சேர்ந்தார்.
இதில் நீடித்திருப்பதற்கு, சமரசம் செய்வதில் தமக்குள்ள ஆர்வமே காரணம் என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சிங்கப்பூர் சமரச மன்றத்தில் சர்ச்சைகளைக் கையாளும் வழக்கறிஞர், எந்தவொரு சர்ச்சையையும் சமரசம் செய்வது ஒரு சவால் என்று கூறினார்.
குறிப்பாக, சர்ச்சையில் ஈடுபட்டுள்ளோரிடம் தங்கள் கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்கான எண்ணம் இல்லாதபோது, அதிலும், தங்கள் வழக்கை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்கள் சமரசப் பேச்சில் கலந்துகொள்ளும்போது பெரும் சவால் என்றார் அவர்.
இந்தத் தொண்டூழியப் பணியை நிறுத்தும் எண்ணம் திரு ரெங்கராஜூவுக்கு இல்லை.
“சமசரப் பேச்சு நடத்துபவராகத் தொடரவும், சிறப்பாக செயல்படவும் பல காரணங்களும் உள்ளன. பல ஆண்டுகளாக நான் பெற்ற இந்த அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.
விருது பெற்ற மற்றொருவரான திரு இந்து குமார் வாசுதேவன் அரசு நீதிமன்றங்களின் இணைய வழக்கு தாக்கல், நிர்வாகத்தைப் பயன்படுத்தி இணையத்தில் சமரசம் செய்த முதல் நீதிமன்ற தொண்டூழிய வழக்கறிஞர். இணைய சமரசத்தில் பயனாளர் அனுபவத்தை மேம்படுத்த கருத்துகளையும் அவர் வழங்கினார்.
கொவிட்-19 சூழல் காரணமாக 330 நீதிமன்ற தொண்டூழியர்களுக்கான வருடாந்திர பாராட்டு விழா இந்த ஆண்டு இடம்பெறவில்லை.
நீதிமன்ற தொண்டூழியர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த, தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், “நீதி வழங்குதல் என்பது பாரம்பரிய சமரசத் தீர்வு முறைகளுக்கு நிச்சயம் மட்டுப்பட்டு விடுவதில்லை. நீடித்த தீர்வுகளுக்கு வழி காண உதவி, அமைதியான போக்கை வளர்க்கும் செயல்முறைகளும் முக்கியமானவை,” என்று அவர்களுக்கு அனுப்பிய செய்தியில் கூறினார்.