மூத்தோருக்கு பராமரிப்பு வழங்கும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு அதிக வேலை, போதிய ஆதரவு இல்லை: ஆய்வறிக்கை

மூத்தோருக்கு பராமரிப்பு வழங்கும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு அதிக வேலை, போதிய ஆதரவு இல்லை: ஆய்வறிக்கை

2 mins read
45e4895e-d2b7-45c3-879e-9424d4760703
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மூத்தோரை கவனித்துக்கொள்ளும் இல்லப் பணிப்பெண்கள் அளவுக்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர்களுக்குப் போதிய ஆதரவு இல்லை எனவும் 'அவேர்' எனப்படும் மாதர் செயலாய்வுச் சங்கம், 'ஹோம்' எனப்படும் குடியேறிகளின் பொருளியல் நிலைக்கான மனிதாபிமான அமைப்பு ஆகியவை இன்று (நவம்பர் 11) வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பல பணிப்பெண்கள் தங்களது பராமரிப்பில் இருக்கும் மூத்தோரை இரவு, பகலாக கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களால் சரியாகத் தூங்க முடிவதில்லை. சில பணிப்பெண்கள் தங்களுக்கு உடல் நலமில்லாதபோதும் தங்களது பராமரிப்பில் இருக்கும் மூத்தோரை கவனித்துக்கொள்ள வேண்டி இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதுபோன்ற சிரமங்களை எதிர்நோக்கும் 25 பேரின் கதைகள் அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அவர்களின் வயது 27 முதல் 53க்குள். அவர்களில் பெரும்பாலானோர் பிலிப்பீன்ஸ், மியன்மார் நடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சராசரியாக ஐந்தாண்டுகள், நான்கு மாதங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்தவர்கள்.

பணிப்பெண்கள் மட்டுமின்றி, பணிப்பெண்களை அமர்த்தும் 4 முகவைகள், 7 முதலாளிகள், மூத்தோரைப் பராமரிப்பதற்கான பர்யிற்சி அளிக்கும் 5 நிறுவனங்கள் போன்றவையும் ஆய்வுக்கான நேர்காணலில் பங்கேற்றன. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூப்படையும் சமூகமான நாம் வெளிநாட்டு இல்லப் பெண்களைச் சார்ந்திருப்பது அதிகரிக்கக்கூடும் என இந்த ஆய்வின் தலைவரும் அவேர் அமைப்பின் ஆலோகருமான திருவாட்டி ஷெய்லி ஹிங்கோரானி குறிப்பிட்டார்.

பணிப்பெண்களின் மனநலம், உடல்நலம் போன்றவற்றில் கவனம் செலுத்தாவிடில், நம் மூத்தோருக்கு வழங்கப்படும் பராமரிப்பின் தரம் குறையக்கூடும் என்றார் ஆவர்.

அளவுக்கு அதிகமான பணிகளால், பல பணிப்பெண்கள் மனநலம் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாலும், தங்களது கருத்தை முதலாளிகளிடம் முன் வைக்க பயப்படுவதாக 'ஹோம்' அமைப்பின் வழக்கு நிர்வாகி திருவாட்டி ஜெயா அனில்குமார் குறிப்பிட்டார்.

அந்த ஆய்வில் 3 முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டதுடன் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. அவை: 1. பராமரிப்பு வழங்க வேண்டிய அளவுக்கு தயார்நிலையில் உள்ள பராமரிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பணிக்கு அமர்த்த வேண்டும். 2. பராமரிப்புத் தரம் - தேவை அட்டவணையை உருவாக்கி, பராமரிப்பு தேவைப்படும் அளவைக் கண்டறிதல். பணிப்பெண்களின் பராமரிப்புத் திறன்களை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்குவது, தேவையான அளவுக்கு பயிற்சி பெற்ற பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு ஊக்கமளிப்பது. பணிப்பெண்களின் வேலை நேரத்தை வரையறுக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தல் 3. சவாலான சூழலில் பராமரிப்பை வழங்கும் பணிப்பெண்களுக்கு போதிய ஆதரவு இல்லாமல் இருப்பதுடன், அவர்கள் ஏச்சுகளுக்கும் உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்க்கும் ஆட்படுகின்றனர். பராமரிப்பு வழங்கும் இல்லப் பணிப்பெண்களுக்கு ஆதரவு குழுக்களை உருவாக்குவது.

இந்த வசதிகள் இருந்தால் மூத்தோருக்கு பராமரிப்பு வழங்கும் துறை மிகவும் கவர்ச்சிகரமானதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.