சிங்கப்பூர் பொருளியல் மீட்சிப் பாதையில் இப்போது தான் திரும்பி இருக்கிறது. மீட்சி பெற அது நீண்டதூரம் செல்ல வேண்டி இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் 3வது காலாண்டில் பொருளியல் மேம்பட்டு இருக்கிறது. இது சிங்கப்பூர் சரியான பாதையில் முன்னேறி வருகிறது என்பதைக் காட்டு வதாக அமைச்சர் கூறினார்.
மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உள்ளூரிலும் உலகளவிலும் பொருளியல் மீட்சியின் வேகத்தை பாதிக்கக்கூடிய நான்கு அம்சங்களைக் கோடிகாட்டினார்.
அந்த அம்சங்களில் இரண்டு அம்சங்கள், சிங்கப்பூரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் கொவிட்-19 தொற்று விகிதமும் கிருமித்தொற்று சூழ்ந்துள்ள இந்த உலகில் நிறுவனங்களும் ஊழியர்களும் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொண்டு மேம்படும் ஆற்றலும் சிங்கப்பூரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கு இடைப்பட்ட அரசியல் நிலவரங்களும் உலகளவில் கொவிட்-19 தொற்று மீண்டும் ஏற்படுவதும் சிங்கப்பூர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இரண்டு அம்சங்கள் என்றார் அவர்.
நம் கட்டுப்பாட்டில் உள்ள அம்சங்களைத் திறம்பட சமாளித்து, நமக்கு அப்பாற்பட்ட அம்சங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கடந்து வந்துவிடுவோமானால் நம்முடைய பொருளியல் மீட்சி வேகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் திரு சான் கூறினார்.
அரசாங்கத்தின் ஆதரவு திட்டங்களைப் பற்றி கருத்துரைத்த வர்த்தக தொழில் அமைச்சர், வருங்காலத்தில் அந்த ஆதரவு நம்முடைய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆக்ககரமான பலன்களின் மீது ஒருமித்த கவனம் செலுத்துவதாகவும் அதை இலக்காக வைத்தே செயல்படுவதாகவும் இருக்க வேண்டும் என்றார்.