சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான, நீண்டகால நல்லுறவை இருநாட்டுத் தற்காப்பு அமைச்சர்களும் மறுஉறுதி செய்துகொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஐந்தாவது இந்திய-சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர்களுக்கு இடையிலான இணையம்வழி கலந்துரையாடலில் நேற்று முன்தினம் பங்கேற்றனர்.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஆதரவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதையும் இரு தற்காப்பு அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் அவர்கள் வரவேற்றனர். மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண ஒத்துழைப்பு பற்றிய செயல்பாட்டு உடன்பாடும் அவற்றில் அடங்கும்.
இரு நாட்டு ஆயுதப் படைகளின் இணையப் பாதுகாப்பு அமைப்புகளும் அவற்றுக்கு இடையிலான தொடர்புகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.
தற்காப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கொவிட்-19 சூழல் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு மத்தியிலும் இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு இரு அமைச்சர்களும் கடப்பாடு தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் நோய்ப் பரவல் உச்சத்தை எட்டியபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் பங்காற்றியதற்கு திரு ராஜ்நாத் சிங் நன்றி கூறினார். சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களில் பலரும் இந்திய நாட்டவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் புவியியல், மக்கள்தொகையில் பல்வேறு சவால்கள் இருந்தபோதும் அந்நாடு கிருமித்தொற்றை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதை டாக்டர் இங் பாராட்டினார்.
தற்போதைய நோய்ப் பரவல் சூழலில் மெய்நிகர் சந்திப்புகளை நடத்துவதன் மூலம் வருடாந்திர கலந்துரையாடல்களைத் தொடர்வதில் மூத்த அதிகாரிகள் கடப்பாடு கொண்டிருப்பதை இரு அமைச்சர்களும் சுட்டினர்.
இவ்வாண்டு இருதரப்புக்கும் இடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் இது அடித்தளமாக அமைகிறது.
இரு நாட்டு கடற்படைகளும் 27வது சிங்கப்பூர்-இந்தியா கடற்துறை இருதரப்பு பயிற்சி நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்து இருப்பது குறித்து இரு அமைச்சர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தற்காப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கடப்பாடு தெரிவித்த இரு அமைச்சர்கள், இவ்வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தனர்.