கொவிட்-19 சூழல் காரணமாக சிங்கப்பூர் பொருளியல் கடந்த ஆண்டு பெரிதும் பாதிப்பு அடைந்ததைத் தொடர்ந்து, பொருளியலின் பெரும்பகுதி இவ்வாண்டு மீட்சியடைய முடியும் என்று பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், பொருளியல் மீட்சி ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கூறிய அவர், விமானப் போக்குவரத்து, கட்டுமானம், சுற்றுப்பயணம் போன்ற துறைகள் மீட்சியடைய காலம் எடுக்கும் என்றார்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அத்தியாவசிய சேவைத் துறையில் பணியாற்றும் ஊழியர்களைச் சந்தித்த பின்னர் சாங்கி பொது மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு லீ மேற்கண்டவாறு கூறினார்.
“கடந்த ஆண்டு கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததால் பொருளியல் நடவடிக்கைகள் மீது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது,” என்றார் அவர்.
பொருளியல் இவ்வாண்டு சிறப்பாகச் செய்யக்கூடும் என்றாலும், நோய்ப் பரவலுக்கு முந்தைய நிலையைவிட அது சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு பொருளியல் 4 முதல் 6 விழுக்காடு வரை விரிவடையும் என முன்னுரைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அது முன்னெப்போதும் இல்லாத அளவாக 5.8 விழுக்காடு சுருங்கியது.
சிங்கப்பூர் பொருளியல் மீட்சி, நாட்டின் மக்கள்தொகைக்குத் தடுப்பூசி போடும் பணிகளின் முன்னேற்றத்தையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடுப்பூசித் திட்டங்களின் முன்னேற்றத்தையும் சார்ந்திருப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார். இந்த நாடுகள் தங்களது தடுப்பூசித் திட்டங்களில் முன்னேற்றம் அடைந்தவுடன் அவற்றின் பொருளியல் மீட்சியடைய முடியும் என்பதால் சிங்கப்பூரால் வழக்கநிலையை நெருங்க முடியும் என்பதை அவர் சுட்டினார்.
நேற்று முன்தினம் காலை தமது துணைவியாருடன் திரு லீ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சிப்பந்தி கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்றார். லண்டன், மணிலா நகரங்களுக்குச் செல்லவிருந்த எஸ்ஐஏ விமானச் சிப்பந்திகள், விமானிகள், ஆதரவுப் பணியாளர்கள் ஆகியோரை திரு லீ சந்தித்தார். போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் மேரி லியூ, என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் லீ, அங்கு மருத்துவர்கள், தாதியர் போன்ற சுகாதாரப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு சிவப்பு அன்பளிப்பு பாக்கெட்டுகள், மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்கி சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தொழில்துறைகளால் ஈடுகொடுக்க முடியுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, மற்றொரு முடக்கநிலையைத் தவிர்க்க அரசாங்கம் கடினமாக முயற்சி செய்யும் என்று திரு லீ பதிலளித்தார்.
“நாம் மீண்டும் முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.
ஊழியர்களுக்குத் திறன் பயற்சி வழங்குவதையும் நிறுவனங்கள் அவற்றின் ஆற்றல்களை வலுப்படுத்துவதையும் அரசாங்கம் உறுதிசெய்து வருவதாக திரு லீ சொன்னார்.