கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறியோர் பிடிபட்டனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக 6,900க்கும் அதிகமான பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் முகக்கவசங்களை அணியாத 1,700க்கு அதிகமானோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.
பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை முதன்முறையாக மீறுவோருக்கு $300 அபராதமும் இரண்டாவது முறையாக குற்றம் புரிவோருக்கு $1,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியோர் செலுத்திய மொத்த அபராதம் குறைந்தது $2 மில்லியனாக இருக்கும். முகக்கவசம் அணியாதோரிடம் இருந்து பெறப்பட்ட அபராதத் தொகை குறைந்தது $510,000 என அமைச்சு தெரிவித்தது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட பெரிய எண்ணிக்கையில் ஒன்றுகூடியதே ஆக அதிகமாக மீறப்பட்ட கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளில் ஒன்று என்று அமைச்சு கூறியது.
“கொவிட்-19 நோய்ப் பரவல் கடுமையான மிரட்டலாக தொடர்கிறது. இதற்கு எதிரான போராட்டத்தில் நாம் மெத்தனமாகிவிடக்கூடாது,” என்று அமைச்சு எச்சரித்தது.
கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்து கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவித்திருந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
“சமூகத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காமல் இருக்க நாம் அனைவரும் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். தொற்று மீண்டும் அதிகரித்தால் அது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பெருமளவு பாதித்துவிடும்.
“உணவு, பானக் கடைகள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற அதிக கூட்டம் காணப்படும் இடங்களில் அமலாக்கப் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரப்படுத்துவர்,” என்று அமைச்சு கூறியது.
இதற்கிடையே, நிறுவனங்கள் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்ய வேலையிடங்களை மனிதவள அமைச்சு அவ்வப்போது சோதனையிட்டு வருகிறது.
வேலையிட பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 140 நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 280க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு அபராதம் விதித்தது.
சிங்கப்பூர் தேசிய காட்சிக்கூடத்தில் இயங்கும் ‘கெம்மா ஸ்டீக்ஹவுஸ்’ எனும் உணவகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஆக அதிகமாக ஏறத்தாழ 75 பேர் ஒன்றுகூடியதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கூறியது.
அந்த உணவகத்தில் பாதுகாப்பு நடைமுறைஅத்துமீறல் குறித்து விசாரணை தொடர்கிறது.
வெவ்வேறு மேசைகளில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடியது தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை 20 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டதாக கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.