அரசாங்கத்தின் தேசிய வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) மீதான எட்டு நாள் விவாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றம் $107 பில்லியன் மதிப்பிலான அடுத்த நிதியாண்டுக்கான செலவினத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த விவாதத்தில் நீடித்த நிலைத்தன்மை, தொழி்ல்துறை உருமாற்றம், வேலைப் பாதுகாப்பு போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி பேசப்பட்டது. நேற்று பட்ஜெட் விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா, இறுக்கமான நிதிச் சூழ்நிலையிலும், சிங்கப்பூர் சிரமமான தெரிவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது என்றார். இவ்வாண்டின் பட்ஜெட்டுக்கான சிங்கப்பூரின் நிதி அணுகுமுறைக்கு மன்றம் ஒப்புதல் அளித்தாலும், ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பிலான விவாதம் தொடரும் என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார். "மன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் சிந்தனையை விட்டுச் செல்ல விரும்புகிறேன். நீங்கள் மக்களுக்கு அதிகம் செய்ய விரும்பினால், நாம் அதிகம் செலவிட வேண்டும். "ஒரு இறுக்கமான நிதிச் சூழ்நிலையில், இந்த நாடாளுமன்றம் சிரமமான முடிவுகளை எடுப்பதிலிருந்து பின்வாங்க முடியாது. அவற்றில் எது பிரபலமானவை எது சரியானவை என்று நாம் முடிவு செய்ய வேண்டும். அதற்கு அரசியல் துணிவு வேண்டும்," என்றும் குமாரி இந்திராணி வலியுறுத்தினார். தேசிய பட்ஜெட் விவாதம் மொத்தம் 71.5 மணிநேரம் நடைபெற்றது. அவற்றில் மூன்று நாள் பட்ஜெட் அறிக்கை தொடர்பானவை. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிக்கையை முன் வைத்தார்கள். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் பேசிய மன்ற நாயகர் டான் சுவான் ஜின், இந்தப் பட்ஜெட் விவாதத்தில் முதல் முறை எம்.பிக்கள், தொகுதியில்லாத உறுப்பினர்கள், புதிய நியமன உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மூன்று நாள் விவாதத்தில் மொத்தம் 65 பேர் பேசினார்கள். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆகக் கூடுதலானது. அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் 569 உரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆக அதிகமானவை என்றார் திரு டான். நேற்று அனைத்துலக மகளிர் தினமாதலால், நாடாளுமன்றத்தில் கூடிய அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திரு டான், ரோஜா மலர்ச்செண்டுகள் கொடுத்து வாழ்த்துக் கூறியது குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கியது.
$107 பி. செலவினத் திட்டத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது
2 mins read
இறுக்கமான நிதிச் சூழ்நிலையிலும், சிங்கப்பூர் சிரமமான தெரிவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்தார். படம்: GOV.SG -
குறிப்புச் சொற்கள்

