கொவிட்-19 கதாநாயகர்கள் கண்காட்சி

கொவிட்-19 கதாநாயகர்கள் கண்காட்சி

2 mins read
44e8dcc5-dd71-46ee-87b5-47babbbaff28
சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியிடம் ஓவியம் ஒன்றை வழங்கும் சிங்கப்பூர் கலைச் சங்கத் தலைவர் டெரன்ஸ் டியோ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிக் கட்டடத்தில் கொவிட்-19 கதாநாயகர்களைச் சிறப்பித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலவச ஓவியக் கண்காட்சி திறக்கப்பட்டு இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு இடம்பெற்றுள்ளன. 'நம் காலத்தின் கதாநாயகர்கள்' என்ற அந்தக் கண்காட்சிக்குத் தேசிய சுகாதார பராமரிப்புக் குழுமம், சிங்கப்பூர் கலை சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று அதனைத் திறந்துவைத்தார். சிறார்கள், வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட பலரின் படைப்புகளும் அங்கு இடம்பெற்று இருக்கின்றன. கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் முன்களப் பணியாளர்களாகத் தொண்டாற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து நன்றி கூறும் வகையில் கண்காட்சி இடம்பெறுகிறது. பொதுமக்கள் அதை இலவசமாக மார்ச் 17 வரைக் காணலாம். அந்தக் கண்காட்சியில் 'நம் காலத்தின் கதாநாயகர்கள்' என்ற அதே தலைப்பில் ஓர் ஓவியமும் இடம்பெற்றுள்ளது. அதை சிங்கப்பூர் கலை சங்கத்தைச் சேர்ந்த 18 ஓவியர்கள் சேர்ந்து உருவாக்கி உள்ளனர். கண்காட்சி முடிந்ததும் இந்தப் படைப்பு தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திற்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்படும். கண்காட்சியைத் திறந்துவைத்து பேசிய அமைச்சர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தான் பாராட்டுவதாகக் கூறினார். 'நமது சுகாதாரப் பராமரிப்பு கதாநாயகர்களைப் போற்றிக் கொண்டாடுவோம்' என்ற கருப்பொருளுடன் தேசிய ஓவியப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் போட்டியின் சிறார் பிரிவில் தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஐமீ லியாவ் என்ற மாணவர் முதல் பரிசைப் பெற்றார். அவரும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார்.