இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குச் சிங்கப்பூர் தடை விதித்து இருக்கிறது.
அந்த நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகமாக இருப்பதே இதற்கான காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
ஒருவர் இந்தியாவில் இருந்து புறப்பட்டு வேறு நாட்டில் தங்கியிருந்து பிறகு சிங்கப்பூர் வருகிறார் என்றால் அவரால் தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் ஒருவரால் ஏற்படக்கூடிய ஆபத்தைவிட குறைவாக இருக்கும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்-ஹாங்காங் இருதரப்பு பயண தொடக்கம் பற்றி அறிவித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஒருவர் ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலம் தங்கி இருக்கிறார் என்றால் அந்த இடத்தின் கொவிட்-19 நிலவரம்தான் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கருத்தில் கொள்ளப்படாது என்றார் அவர்.
இந்தியாவுக்கு வெளியே குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்கி இருந்திருக்கக்கூடிய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.