அவ்வப்போது தங்கள் ஊழியர்கள் கட்டாய கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை உணவு, பான நிலையங்கள் செய்து வருகின்றன. பரிசோதனை செய்வது குறித்துக் கற்றுக்கொள்ள ஒரு சில உணவகங்கள் தங்கள் ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பி வருகின்றன.
கட்டாயப் பரிசோதனை நடைமுறையால் நடைமுறைச் செலவுகள் அதிகரிக்கலாம் என்று உணவு, பானக் கடைகள் எதிர்பார்க்கின்றன. ஆயினும், விதிமுறைக்கு இணங்கி நடக்கும் வகையில், பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை அவை மேற்கொண்டு வருகின்றன.
இன்று முதல் உணவு, பானக் கடைகளில் அதிகபட்சம் இருவர் அடங்கிய குழுக்களாக அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள், உடற்தகுதி நிலையங்கள் போன்ற கொரோனா தொற்றும் அபாயம் அதிகமுள்ள இடங்களில் பணிபுரிவோர்க்கு அவ்வப்போது கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்வது அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து கட்டாயமாக்கப்படவுள்ளது.
சில பெரிய உணவு, பான நிலையங்கள் முன்கூட்டியே அதனைத் தொடங்கவுள்ளன.
பரிசோதனை குறித்த பயிற்சிக்கு தங்கள் ஊழியர்கள் அனுப்பப்படுவர் என்றும் அடுத்த வாரத்தில் இருந்து பரிசோதனைக் கருவிகள் வந்து சேரும் என்றும் மெக்டோனல்ட்ஸ் துரித உணவு நிலையக் குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து கட்டாயப் பரிசோதனையைத் தொடங்க அக்குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்கள் முறையாகப் பயிற்சி பெற்று, பரிசோதனைக் கருவிகள் கிடைக்கத் தொடங்கியதும் அவ்வப்போதைய கட்டாயப் பரிசோதனை நடைமுறைப்படுத்தப்படும் என்று டுங் லோக் உணவகக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.
சில உணவு, பான நிலையங்கள் தங்கள் ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பி வருவதாகவும் கட்டாயப் பரிசோதனையை நடைமுறைப்படுத்த அவை தயாராக இருப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தேக்காவிலும் ஈசூனிலும் இன்று முதல் விரைவுப் பரிசோதனை நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்றும் அத்தகைய மேலும் பல நிலையங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.
மேற்பார்வையுடன் தாங்களாகவே சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ளும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய முடியாத சிறிய வணிகங்களுக்கு அந்த விரைவுப் பரிசோதனை நிலையங்கள் ஆதரவளிக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.