சிங்கப்பூர் முழுவதும் பேருந்து நிலையங்களில் உள்ள வேைலயிட நடைமுறைகள் கிருமிப் பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று தொற்றுநோய் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
இத்தகைய இடங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ரோஃபி மருந்தகத்தைச் சேர்ந்த டாக்டர் லியோங் ஹோ நாம் என்ற அந்த நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
புதன்கிழமை நிலவரப்படி எட்டுப் பேருந்து நிலையங்களில் 314 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கான காரணங்களை டாக்டர் லியோங் விவரித்துள்ளார்.
ஓய்வு எடுக்கும் பகுதியில் ஓட்டுநர்களுக்கு இடையிலான உரையாடல், கழிப்பறைகளை அவர்கள் பயன்படுத்தும் விதம், அங்கு முகக்கவசத்தைக் கழற்றுவது, முகத்தைக் கழுவுவது, மிகவும் அசுத்தமாக மாறிய கழிப்பறைகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய ஊழியர்களான அவர்கள் துணியால் ஆன முகக் கவசங்களுக்குப் பதிலாக அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முறையான முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
“கடந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் வழங்கப்பட்ட முகக்கவசங்களை இன்னமும் சிலர் அணிவதைப் பார்க்க முடிகிறது. இது நல்லதல்ல,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் ஏறக்குறைய 9,500 பேருந்து ஓட்டுநர்கள் இருக்கின்றனர். முன்கள பொதுப் போக்குவரத்து ஊழியர்களில் 99 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளனர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 95 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த நிலையில், தடுப்பூசி போட்டாலும் போடாவிட்டாலும் உணவு உண்ணவும் புகைப்பிடிக்கவும் தனியாகச் செல்லுமாறு ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலைத் தடுக்க மற்றொரு யோசனையை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக லீ கொங் சியென் வர்த்தகப் பள்ளியின் உதவி பேராசிரியர் டெரன்ஸ் ஃபான் வெளியிட்டுள்ளார்.
ஓட்டுநர் இருக்கையைச் சுற்றி கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவரது யோசனை.
கடந்த ஆண்டே இந்த யோசனையை தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சோதித்துப் பார்த்தது.
கண்ணாடிகளில் ஏற்படும் பிரதிபலிப்பு ஓட்டுநர்களின் பார்வையை பாதிக்கும் என்பதால் அது பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, அதிகரிக்கும் தொற்றுக் குழுமங்களால் பெரிதாக கவலைப்படவில்லை என்று பேட்டி அளித்த பெரும்பாலான பயணிகள் கூறியுள்ளனர்.
“பொதுவாக தொற்றுக் குழுமம் உள்ள இடங்களை தவிர்ப்பது வழக்கம். ஆனால் வாரத்தில் ஐந்து நாட்கள் ஜூரோங் ஈஸ்ட் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்கிறேன்,” என்று டான் சோங் டீ, 71, என்ற பயணி தெரிவித் தார்.
இந்தப் பேருந்து நிலையத்தில்தான் புதன்கிழமை நிலவரப்படி ஊழியர்களுடன் தொடர்புடைய 28 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.