பொதுப் பேருந்து ஓட்டுநர்களும் பேருந்து நிலையங்களில் சேவையாற்றும் முகப்பு ஊழியர்களும் இனி குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை கிருமிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் பொருட்டு கடுமையாக்கப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இந்தக் கடுமையான விதிகளை அறிவித்தது.
அதன்படி, நேருந்து நிலையங்களில் சாப்பிடுவதற்கும் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. சாப்பிடு
வதற்கான இடத்தில் ஒரு நேரத்தில் ஒரு பேருந்து ஊழியர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையங்களில் உள்ள சிறு உணவங்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட இயலாது.
ஆயினும் அவர்கள் அங்கு உணவு வாங்கிச் செல்லாம். பேருந்து நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சாப்பிடும் இடமும் ஓய்வெடுக்கும் இடமும் இனி தனித்தனியாகப் பிரிக்கப்படும். முகக்கவசம் அணிந்து ஓய்வெடுக்கும் ஊழியர்களிடமிருந்து சாப்பிடுவோர் ஒன்றுகலக்காது இருக்க இந்த ஏற்பாடு.
பேருந்துத் துறையைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட முகப்புப் பணியாளர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும்.
புதன்கிழமை நிலவரப்படி பேருந்து நிலையத் தொற்றுக் குழுமங்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்து, அதனால் 314 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை ஆணையம் கடுமையாக்கி உள்ளது.
அடுத்த வாரம் முதல் எல்லாப் பேருந்து நிலையங்களிலும் காற்று சுத்திகரிப்புச் சாதனங்கள் நிறுவப்படும்.
மேலும் ஒரு நடவடிக்கையாக புகைபிடிப்போர் ஒருவரோடு ஒருவர் சேராமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் நின்று புகைபிடிக்கும் வகையில் தனித்தனி சிறுகூடங்கள் நிறுவப்படுகின்றன.
பேருந்து நிலைய ஊழியர்கள் பகுதிகளில் அதிகமானோர் தொடும் பகுதிகள் இனி மணிக்கு ஒரு தடவை சுத்தம் செய்யப்படும்.
கட்டுப்பாடுகளை நேற்று மாலை செய்தியாளர்களிடம் விளக்கிய ஆணைய அதிகாரிகள், பேருந்து நிலைய தொற்றுக் குழுமங்களால் பேருந்து செயல்பாடுகளில் இப்போதைக்கு பெரியதொரு தாக்கம் ஏற்படவில்லை என்றனர்.
இருப்பினும், தொற்றுக் குழுமங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் பேருந்து சேவைகளுக்கு இடையிலான நேரத்தை நீட்டிக்கும் தற்காலிக யோசனைகள் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினர். பேருந்து சேவை ஆகக் குறைவாகத் தேவைப்படும் வழித்தடங்களில் இருந்து இந்நடவடிக்கை தொடங்கக்கூடும்.
இவ்வாறு செய்யும்போது பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் நேரம் அதிகமாகும். ஜூரோங் ஈஸ்ட் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே அப்படியொரு நிலை இருப்பதாகக் கூறப்பட்டது.
அங்கு ஒன்று அல்லது இரு பேருந்து சேவைகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பேருந்து நிலைய தொற்றுக் குழுமங்களால் பாதிக்கப்பட்ட 314 பேரில் 284 பேர் பேருந்து நிலையங்களின் முகப்புப் பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சேவைப் பணியாளர்கள். எஞ்சியவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்.
இருப்பினும் அவர்களில் யாருக்கும் கடுமையான உடல்நலக் கோளாறு ஏற்படவில்லை என்று ஆணையம் நேற்று கூறியது. பேருந்து நிலைய முகப்பு ஊழியர்களில் 95 விழுக்காட் டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.