வகுப்பறைக்கு அப்பால் வீடுகளில் குறைந்து வரும் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க கல்வி அமைச்சும் இதர அமைப்புகளும் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வர்த்தக, வீட்டுச் சூழல்களில் ஆங்கில மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் குறைந்து வரும் தாய்மொழி புழக்கத்தைச் சுட்டிய அமைச்சர் இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றார் திரு சான்.
"சமூகத்துடன் கல்வி அமைச்சு இணைந்து தமிழாசிரியர்களின் கற்பித்தல் முயற்சிகளுக்கு ஆதரவு தந்து, மாணவர்களுக்கு புதிய கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது. அதில், 2006ஆம் ஆண்டில் உருவான தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஓர் உதாரணம்.
"கடந்த சில ஆண்டுகளாக வளர்தமிழ் இயக்கம், தமிழ் முரசு போன்ற பங்காளிகளுடன் இக்குழு இணைந்து அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
"2017லிருந்து 'அழகே தமிழே' போன்ற மாணவர் நடவடிக்கை நிகழ்ச்சிகளின் வழி அது தாய்மொழிக் கற்றலை இன்னும் சுவராசியமாக ஆக்கியுள்ளது," என்றார் அமைச்சர்.
"இவ்வாண்டு தமிழ் முரசு இணையப் பக்கத்தில் மாணவர் முரசு புதிர் அங்கத் தொடரை அறிமுகம் செய்து, சிறாரிடையே தமிழ் கலாசாரக் கூறுகளைப் பாராட்டும் விதமாக அமைத்து, வீட்டில் தமிழ் கற்கும் சூழலையும் உருவாக்கியுள் ளது.
தமிழாசிரியர்களின் நிபுணத்துவ மேம்பாட்டுக்கு ஆதரவாக, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வேலை பயிற்சித் திட்டங்களை வழங்கி, மெய்நிகர் பாணியில் அவர்களுக்கு முன்னணி வெளிநாட்டு கல்வி நிபுணர்கள் நடத்தும் பயிரலங்குகளை ஏற்பாடு செய்து வருகிறது.
"கல்வி அமைச்சு, தமிழ் மொழி விருப்பப்பாடத் திட்டத்தை அறி
முகம் செய்து, தமிழ் இலக்கியம் பற்றிய வெளிநாட்டுப் பயணங்கள், உள்ளூர் முகாம்கள் உள்ளிட்ட புத்தாக்க முறைகள் மூலம் கற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது," என்று திரு சான் கூறினார்.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நடத்திய 'நல்லாசிரியர் விருது 2020/2021' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சர் உரை நிகழ்த்தினார்.
கடந்த ஆண்டு நடைபெறவேண்டிய இவ்விருது நிகழ்ச்சி கொவிட்-19 காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் மூன்று வாழ்நாள் சாதனையாளர்கள் உட்பட, மொத்தம் 9 தமிழாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
"இந்நிகழ்வை நடத்துவதன் மூலம் தொடர்ந்து தமிழாசிரியர் களுக்கு ஊக்கம் தரும் விருதின் நோக்கத்தை பூர்த்தி செய்யமுடிகிறது." என்றார் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர்.
"கொரோனா சூழலில் பணிச் சுமை, மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது உற்சாகம் தரும் என சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தனபால் குமார் கூறினார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி இணையத்திலும் நேரலையாக இடம் பெற்றது.