சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகசிலருக்கே நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. கொவிட்-19 தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு நீண்டகால பாதிப்புகள் நீடிப்பதுண்டு.
களைப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சுப் பகுதியில் வலி, மூட்டு வலி, சிந்தனை மந்தம் முதலானவை அவற்றில் அடங்கும். இவை நான்கு அல்லது அதற்கும் அதிக வாரங்கள் நீடிக்கும்.
ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைப் பொறுத்தவரை நீண்டகால பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் பாதி அளவுக்குக் குறைந்துவிடும் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் சிங்கப்பூர் தொற்றுநோய் மருந்தக ஆய்வுக் கட்டமைப்பின் தலைவர் டாக்டர் பார்னபி யங் தெரிவித்தார்.
உலகளாவிய புள்ளிவிவரங்களும் இதையே புலப்படுத்துகின்றன. வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே நீண்டகால பாதிப்புகள் காணப்படு வதாகத் தெரிவிக்கப்பட்டதுண்டு.
ஆனால் இங்கு இதுவரை இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. களைப்பு, மயக்கம் போன்ற அத்தகைய அறிகுறிகள் சளிக்காய்ச்சலின் தொடர்விளைவுகளாகவும் இருக்கக்கூடும். இது குணமாக பல மாதங்கள் பிடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு கிருமி தொற்றினால் பொதுவாக கடுமையான பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் இது உண்மையான நிலவரமாக தொடர்ந்து இருந்து வருமா என்பதை மிகவும் கவனமாக ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்றும் டாக்டர் யங் கூறினார்.
இதனிடையே, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவு மூத்த ஆலோசகர் பேராசிரியர் பால் தம்பையா, இம்மருத்துவமனை யைப் பொறுத்தவரை, தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகளிடையே இன்றுவரை யாருக்கும் நீண்டகால பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
சளிக்காய்ச்சல் போன்ற இதர தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்களிடத்திலும் நீண்டகால அறிகுறிகள் காணப்பட்டு இருப்பதாகவும் இவர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே நீண்டகால பாதிப்புக்கு ஆளாவோர் மிகக் குறைவு