தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான வெளிநாட்டுப் பயணத் திட்டத்தின்கீழ், 12 வயது வரைப்பட்ட, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறார்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அந்தச் சிறார்கள் தனிமையில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட, நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற பயணி ஒருவருடன் சேர்ந்து சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றில் ஆணையம் தெரிவித்தது.
அந்தச் சிறார்கள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் ஒரு முறையும் இங்கு வந்து தரையிறங்கியதும் ஒரு முறையும் என மொத்தம் இரண்டு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.
இரண்டு, அதற்கும் குறைந்த வயதுள்ள கைக்குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை தேவையில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டோ ருக்கான பயண ஏற்பாட்டுத் திட்டம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக சனிக்கிழமை அரசாங்கம் அறிவித்தது.
அத்திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தங்களுடைய பிள்ளைகள் பயணம் செய்ய இயலாத நிலை பற்றி பெற்றோர் பலர் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே, விதிகளை அரசாங்கம் ஏன் தளர்த்தியது என்று கேட்டதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், 12 வயதுக்கு குறைந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறார்களை அனுமதிப்பது அவர்களுக்கு மேலும் சில வாய்ப்புகளைத் திறந்துவிடுவதாக இருக்கும் என்றார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறார்களை அந்தப் பயணத் திட்டத்தில் சேர்ப்பதில்லை என்று தொடக்கத்தில் முடிவு எடுக்கப்பட்டதற்குக் கூடுதல் எச்சரிக்கையுடன் கூடிய அணுகுமுறையே காரணம் என்று ஒரு பேட்டியில் அமைச்சர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பயணம் செய்ய விரும்பினால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளும்படி அமைச்சர் குடும்பங்களை வலியுறுத்தினார்.
பல நாடுகளிலும் வெவ்வேறான நிபந்தனைகள் நடப்பில் இருப்பதால் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்ளும்படியும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் பயணம் மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டம் நவம்பர் 15ஆம் தேதி தென்கொரியாவுக்கு நீட்டிக்கப்படும்.
இந்தப் பயணத் திட்டத்தின்கீழ் ஜெர்மனி, புருணை உள்ளிட்ட மொத்தம் 11 நாடுகளுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.
இருந்தாலும் இப்போது உல்லாசப் பயணங்களை மேற்கொள்ள புருணை அனுமதிக்கவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறார்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியில் தகுதிபெறாத மக்களையும் தென் கொரியா இப்போது அனுமதிப்பதில்லை. இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2009ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்த சிறார்கள் சிங்கப்பூருக்கு வரமுடியும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
இந்தப் பயணத் திட்டங்களை விரிவுபடுத்துவதால் சிங்கப்பூரின் சுற்றுலா தொழில்துறைக்கும் விமானப் போக்குவரத்து மையம் என்ற நிலைக்கும் எந்த அளவுக்கு நன்மை ஏற்படும் என்பது பற்றி கருத்து கூறிய அமைச்சர் ஈஸ்வரன், இப்போது இந்தத் திட்டத்தின்கீழ் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் 11 நாடுகளும், தொற்றுக்கு முன்பு சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகளில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினருக்குப் பொறுப்பு வகித்தன என்றார்.
"அந்த நாடுகள் சிங்கப்பூரின் முக்கிய 20 வர்த்தகப் பங்காளி நாடுகளில் அடங்கும்.
"சிங்கப்பூரில் அவை கணிசமான வர்த்தகச் சமூகங்களையும் குடும்பத்தினரையும் கொண்டு இருக்கின்றன. ஆகையால் அந்த நாடுகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமானது," என்று அமைச்சர் விளக்கினார். புதிய பயண ஏற்பாட்டின்படி மொத்தமாக பார்க்கையில் ஏறத்தாழ 3,000 பயணிகள் அன்றாடம் சிங்கப்பூருக்கு வர இயலும் என்பதை அமைச்சர் சுட்டினார்.
இது கொவிட்-19க்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்றாலும் இப்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவுக்கு மேம்பட்ட ஒன்றாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பக்கத்து நாடுகளுடன் பயணத் திட்டங்களைத் தொடங்குவது பற்றி கருத்துரைத்த அமைச்சர், அதன் தொடர்பில் பல வழிகளையும் பற்றி தாங்கள் தொடர்ந்து விவாதித்து வருவதாகக் கூறினார்.