ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கிருமியை சிங்கப்பூர் அணுக்கமாக கண்காணித்து வருகிறது. முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் சிங்கப்பூர் இந்தப் புதிய உருமாறிய கிருமியால் மீண்டும் அவற்றைக் கடுமையாக்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும், இந்நாட்டு மக்கள் கடந்த ஈராண்டுகளாக கிருமிப்பரவலைக் கையாண்ட விதத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறிய திரு லீ, இந்தக் கிருமிப்பரவலை சிங்கப்பூர் தொடர்ந்து எதிர்கொள்ள முடியும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் பேசிய திரு லீ, முதன்முறையாக ஓமிக்ரான் பற்றிய கருத்துகளை வெளியிட்டார். பரிணமித்துவரும் வைரஸ் கிருமியை எதிர்கொள்ளும் சிங்கப்பூர், மேலும் பல சிக்கல்களுக்கு மனதளவில் தயாராகவேண்டும் எனக் கூறினார்.
“இதனை நாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். சில அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்பு நாம் சில அடிகள் பின்னே நகரவேண்டும்,” என்று அவர் கூறினார். “ஆயினும், இந்தக் கிருமியுடன் வாழும் வழியைக் கண்டுபிடித்து நமக்கு விருப்பமான நடவடிக்கைகளை பாதுகாப்புடன் தொடர ஆசைப்படுகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
புதிதாக உருமாறிய கிருமியான ஒமிக்ரான் கிருமி, வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இந்த உருமாறிய கிருமி கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் மீது கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் விதித்துள்ளது.