தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதை அடுத்து, இன்றுமுதல் அங்கு இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு நடப்பிலிருக்கும்.
அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் புதிதாக 2,731 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 48 பேர் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஊர் திரும்பியவர்கள். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கிருமிப் பரவல் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரையிலும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.
பேருந்து, புறநகர் ரயில்களில் 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம்.
பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதிவரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி சனிக்கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.