கொவிட்-19 பரவலால் வெளிநாடு சென்று கற்க முடியாதோருக்கு ஆதரவு
வெளிநாடுகளுக்குச் சென்று மேற்கல்வி பயிலத் திட்டுமிட்டு, கொவிட்-19 கிருமிப் பரவலால் அதை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து கூடுதல் இடங்களை உருவாக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
பல்கலைக்கழகங்களில் ஓராண்டில் சேரும் சிங்கப்பூரர்கள் விகிதம் மீண்டும் 40 விழுக்காட்டைத் தாண்டினாலும் அதனைச் செய்வோம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
திட்டமிட்டபடி வெளிநாடு சென்று மேற்கல்வி பயில இயலாத மாணவர்களுக்கு இடமளிக்கும் விதமாக, கடந்த ஈராண்டுகளிலும் அவ்விகிதம் 40 விழுக்காட்டைத் தாண்டியதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஆறு பல்கலைக்கழகங்களும் ஒட்டுமொத்தத்தில் 2020ஆம் ஆண்டில் 17,500 மாணவர்களுக்கும் 2021ல் 17,800 மாணவர்களுக்கும் இடமளித்தன.
இவ்விரு ஆண்டுகளிலும் சேர்ந்த மாணவர்கள் விகிதம் தலா 42 விழுக்காடாக இருந்தது.
கூடுதல் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், உயர்தரமான கல்வியை உறுதிசெய்யும் வகையில் சேர்க்கைத் தரங்கள் பேணப்படும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
"ஓராண்டில் சேரும் மாணவர்கள் விகிதம் என்ற நிலையிலிருந்து நாம் முன்செல்ல வேண்டியுள்ளது. வாழ்நாள் முழுதும் தொடர்ந்து நாம் கற்க வேண்டுமானால், நாம் வாழ்நாள் கல்வியில் சேருவோர் விகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஒருவர் பட்டக் கல்வி பயில்கிறாரா, பட்டயக் கல்வி அல்லது நிபுணத்துவச் சான்றிதழ் பெறுகிறாரா என்பதோ, எந்த வயதில் படிக்கிறார் என்பதோ முக்கியமல்ல," என்று திரு சான் சொன்னார்.
"நம் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் ஆதரவளிக்கும் ஒரு முறையை நாம் கட்டமைக்க வேண்டும். தேவைக்கேற்ற, தேவைப்படுவோருக்கான கற்றல் முறையாக அது விளங்க வேண்டும்," என்றார் அவர்.
பட்டம், பட்டயம் என்றில்லாமல், அதிகமான சிங்கப்பூரர்கள் பாடப்பிரிவுகளைத் தேர்ந்து எடுப்பதைத் தாம் காண்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"அவர்கள் குறிப்பான, வேலைச் சந்தையில் தங்களுக்குக் கூடுதல் சாதகம் தரும் பாடப்பிரிவுகளைத் தேர்வுசெய்து பயில்கின்றனர்.
"எடுத்துக்காட்டாக, இணையப் பாதுகாப்புத் துறையில் ஏற்கெனவே ஒருவர் சில ஆண்டுகளாக வேலைசெய்து வந்துள்ளார் எனில், குறிப்பிட்ட இயங்குதளங்களில், குறிப்பான தேர்ச்சிகளைப் பெறும் பாடப்பிரிவுகளை அவர் தேர்வுசெய்து படிக்க வேண்டி இருக்கலாம்," என்று திரு சான் விளக்கினார்.
"முழுவீச்சில் கல்வியைத் தொடரும்போது, 17,000 அல்லது அதற்கு மேற்பட்ட பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் அரசாங்கம் திட்டமிடக்கூடாது.
"மாறாக, ஓராண்டில் 300,000 முதல் 400,000 ஊழியர்களுக்கென, அனைத்துவிதமான 'தொடர்கல்வி நிலையங்களுக்கும்' திட்டமிட வேண்டும். அதனால், பல்கலைக்கழகங்களும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் தொடர்கல்விக்கான இடங்களாகத் திகழ வேண்டும் என விரும்புகிறேன்," என்றும் அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்த ஐந்தில் இரு சிங்கப்பூரர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயம் பெற்றவர்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
தொடக்கப் புள்ளி அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மாணவரையும் கைதூக்கிவிட்டு, கல்வியின் மூலம் அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள ஆதரவளிப்பதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.
சமூக, பொருளியல்நிலை அடிப்படையில் கடைசி 30 விழுக்காட்டில் இருக்கும் மாணவர்கள் அரசாங்க உதவியுடன் கூடிய பட்டப் படிப்புகளில் சேர்வது கூடி இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
2004ல் 13 விழுக்காடாக இருந்த அவ்விகிதம், 2019ல் 21 விழுக்காடாக உயர்ந்தது.