‘ஹீலிங் த டிவைன்’ என்ற தடுப்பூசிக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்திய திருவாட்டி ஐரிஸ் கோ கைதாகி இருக்கிறார்.
அவரோடு மருத்துவர் ஒருவரும் அவரது உதவியாளரும் கைதாயினர்.
தடுப்பூசி சான்றிதழ்களில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்து அவற்றைச் சுகாதார அமைச்சிடம் தாக்கல் செய்யவும் ஏமாற்றவும் அவர்கள் சதித்திட்டம் போட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில் அதிகாரிகள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தனர் என்று தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தாங்கள் 40 மற்றும் 33 வயதுள்ள இரண்டு ஆடவர்களையும் 46 வயதுள்ள மாது ஒருவரையும் கைது செய்து இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சதியில் சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மற்ற எட்டு பேரை விசாரித்து வருவதாகவும் காவல்துறை கூறியது.
கைதான மூவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு விசாரணை
அதே விவகாரத்தின் தொடர்பில், பிடோக்கில் செயல்படும் ‘வான் மெடிக்கல் கிளினிக்’ என்ற மருந்தகத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரைப் பற்றி விசாரித்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியது.
கொவிட்-19 தடுப்பூசி ஆவணங்களில் இடம்பெற்ற சட்ட விரோதமான திருத்தங்கள் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அந்த மருத்துவருடன் தொடர்புடைய நான்கு மருந்தகங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக நடத்தப்படும் ஏஆர்டி பரிசோதனையை தொலைவில் இருந்தபடி நடத்தித்தர அந்த மருந்தகம் முன்வந்ததாகக் கூறப்படுவது பற்றியும் அமைச்சு விசாரித்து வருகிறது..
‘ஹீலிங் த டிவைன்’ அமைப்பைத் தொடங்கிய திருவாட்டி ஐரிஸ் கோவுடன் சேர்ந்து மருந்தகம் அதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு டிசம்பரில் தனக்கு அனாமதேய தகவல் கிடைத்ததை அடுத்து அந்த மருந்தகத்தைத் தான் கவனித்து வருவதாக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தனிப்பட்டவர்கள் சுயமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்வதைக் காட்டும் காணொளிகளை அல்லது படங்களைத் தன்னிடம் அனுப்பிவைக்க அந்த மருந்தகம் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மருந்தகம் அவற்றை அனுப்பியோருக்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவைத் தெரியப்படுத்தும்.