நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பில் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் எம்.பி. ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரத்தில் அவருக்கு $35,000 அபராதம் விதிக்கவும் அதன் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடம் அரசாங்க வழக்கறிஞர் விசாரணை நடத்தவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நாடாளுமன்றத்தில் திருவாட்டி ரயீசா கான் பொய்யுரைத்தார். அதன் தொடர்பில் நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு கடந்த டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், அக்குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுமுன் திரு சிங் நடந்துகொண்ட விதம் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதைப் பரிசீலிக்கும் பொருட்டு அவரிடம் அரசாங்க வழக்கறிஞர் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தலைமையிலான அந்த எண்மர் குழுவில் மேலும் ஆறு மக்கள் செயல் கட்சி எம்.பி.க்களும் ஹவ்காங் தொகுதியின் பாட்டாளிக் கட்சி எம்.பி. டெனிஸ் டானும் இடம்பெற்றுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்றதாகவும் அப்போது அவ்விவகாரத்தைக் காவல்துறை அதிகாரிகள் கருணையற்ற முறையில் கையாண்டதாகவும் அதனால் அப்பெண் அழுதுவிட்டார் என்றும் திருவாட்டி ரயீசா கான் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பொய் சொன்னார். அதற்காக அவருக்கு $25,000 அபராதம் விதிக்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்பின் 2021 அக்டோபர் 4ஆம் தேதி அவர் அதே பொய்யை மீண்டும் கூறியதால் அவருக்கு மேலும் $10,000 அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பின்னர் நவம்பரில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் காவல்துறையிடம் சென்றது குறித்து தாம் அங்கத்தினராக உள்ள ஒரு குழு மூலமாக அறிந்துகொண்டதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒப்புதலின்றி அதைப் பகிர்ந்துகொண்டதையும் திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி பாட்டாளிக் கட்சியில் இருந்து விலகினார் 29 வயதான திருவாட்டி கான். அத்துடன், செங்காங் குழுத்தொகுதி எம்.பி. பதவியையும் அவர் துறந்தார்.
2020 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, சிங்கப்பூரின் ஆக இளம் எம்.பி.யாக அவர் தேர்வுபெற்றார். ஆனாலும், 15 மாதங்களிலேயே அவர் தமது எம்.பி. பதவியிலிருந்து விலகினார்.
பாட்டாளிக் கட்சி துணைத் தலைவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதி எம்.பி.யுமான ஃபைசல் மனாப்பையும் அரசாங்க வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. குழு முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்ததற்காகவும் அவர்மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதைப் பரிசீலிக்கவும் இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக குழு குறிப்பிட்டது.
அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி.யுமான திரு சிங்கிற்கு எதிரான புலன்விசாரணை அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், அவை முடியும்வரை அவருக்கு எதிரான ஏற்புடைய தடைகள் ஒத்திவைக்கப்படும் என்று குழு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குழுவின் பரிந்துரைகள்மீது விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தம் சிங்: பணிகள் தொடரும்
இதனிடையே, தாம் அரசாங்க வழக்கறிஞரால் விசாரிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழு பரிந்துரைத்து இருந்தாலும், எப்போதும்போல் தமது பணிகளைத் தொடரவிருப்பதாக திரு பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் ஃபைசல் மனாப்பும் அவ்வாறே செய்வார் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாக திரு சிங் கூறியிருக்கிறார்.
குழுவின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் எனத் தாம் கருதுவதாகக் கூறிய திரு சிங், இன்னும் பல தெரியாத விஷயங்கள் இருப்பதாகவும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குழுவின் அறிக்கை நாடாளுமன்ற விவாதத்திற்கு வைக்கப்படும்போது, அது குறித்து தாம் விரிவாகப் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழுவிடம் பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் அளித்த சாட்சியத்தின் சில பகுதிகள் பயனுள்ளதாக இருந்தன என்றும் ஆனாலும் அவரும் பொய்ச் சாட்சியம் அளித்தார் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.