அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாகப் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 7% லிருந்து 9 விழுக்காடாக ஏற்றம் காண்கிறது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 8% ஆகவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 9% ஆகவும் ஜிஎஸ்டி உயர்த்தப்படும்.
இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் முதன்முறையாக வெளியிட்ட லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று இதைத் தெரிவித்தார்.
ஒன்றுசேர்ந்து முன்னுக்குச் செல்லும் புதிய வழியை வகுப்போம் எனும் தலைப்பிலான இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உதவும் பொருட்டு $6.6 பில்லியன் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பொருள், சேவை வரி அதிகரிப்பை ஈடுசெய்ய உதவும்.
சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு ஜிஎஸ்டி உயர்விலிருந்து பெறப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்றார் திரு வோங்.
அத்துடன் எதிர்காலத்தில் சமூகச் செலவினங்கள் உயர்ந்துகொண்டு இருக்கும் என்பதாலும், ஜிஎஸ்டி உட்பட பல வரிகளை உயர்த்த வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் சொன்னார். இந்த உயர்வைச் சமாளிக்க அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 21 வயது, அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் $700 முதல் $1600 வரையிலான ரொக்க வழங்கீடு பெறுவர்.
இதுதவிர அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தகுதிபெறும் குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு- யூசேவ், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு உட்பட பல திட்டங்கள் இந்த உறுதித் தொகுப்பில் உள்ளன.