கல்வி அமைச்சர் அறிவிப்பு: எல்லா தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளும் தேர்வை நடத்தாது
சிங்கப்பூரில் உயர்நிலை, தொடக்கநிலை பள்ளிக்கூடங்கள் அனைத் தும் அடுத்த ஆண்டு முதல் அரையாண்டுத் தேர்வை அகற்றிவிடும்.
மாணவர்களின் கல்வித் தரம், தேர்வுகளில் ஒருமித்த கவனம் செலுத்தும் நடைமுறையில் இருந்து விலகிச் செல்லும் அணுகுமுறையையொட்டி அந்தத் தேர்வை இனி பள்ளிக்கூடங்கள் நடத்தாது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களை அறிவித்தார்.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள படிப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் வாய்ப்புகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மதிப்பெண்களில் முக்கிய கவனம் செலுத்தாமல் மாணவர்கள் பலவற்றையும் கற்றுக்கொள்வதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த இந்தப் புதிய அணுகுமுறை உதவும் என்றார் அவர்.
தொடக்கப்பள்ளி 3 மற்றும் 5, உயர்நிலை 1 மற்றும் 3 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த மூன்றாண்டுகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த 2019 முதல் தொடக்கப்பள்ளி 1, மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு, பொதுத்தேர்வு எதையும் எழுதவில்லை. அவர்களுக்குத் தரச் சான்றிதழும் கொடுக்கப்படவில்லை.
இத்தகைய மாற்றங்கள் ஆக்க கரமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் திரு சான் மன்றத்தில் தமது அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது தெரிவித்தார்.
இந்த ஏற்பாடுகளின் மூலம் பள்ளிக்கூடங்களும் ஆசிரியர் களும் மாணவர்களின் கற்றல் திறனை வலுப்படுத்தலாம். அவர் களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கலாம் என்றார் அமைச்சர்.
எந்தெந்த படிப்பில் மாணவர்கள் ஆற்றலுடன் இருக்கிறார்கள், எவை எவை அவர்களுக்குச் சிரமமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க ஆசிரியர்களும் பள்ளிக்கூடங்களும் இப்போதைய மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மாணவர்களும், மதிப்பெண்களில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் பலவற்றையும் கற்றுக்கொள்வதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்று திரு சான் விளக்கினார்.
அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதால் மாணவர்களுக்கு வாழ்க்கை தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு கிடைப்பதாக மன்றத்தில் உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பள்ளிக்கூடங்கள், அவை தயாராக இருக்கும்பட்சத்தில், எஞ்சிய வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வை இந்த ஆண்டில் ரத்து செய்யலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
பள்ளிக்கூடங்கள் பலவகைப்பட்ட மதிப்பீடுகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும்.
காலக்கிரம முறைப்படியான செய்முறை பயிற்சிகளின் வழியாக தகவல்களை வழங்குவதோடு வழிகாட்டியும் மாணவர்களுக்கு அவை உதவும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
மாணவர்கள் தங்களுக்கு நாட்டமான படிப்புகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க ஏதுவாக அதிக வாய்ப்புகளை கல்வி அமைச்சு ஏற்படுத்தித் தரும்.
இதனையொட்டி அது பாடத்திட்ட உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்யும் என்றும் திரு சான் விளக்கினார்.
பல வாய்ப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை மாணவர்களின் பலதரப்பட்ட தேவைகளுக்குத் தோதாக மாற்றி அமைக்கும் ஆற்றலை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
மாணவர்கள் பலவற்றையும் கற்றுக்கொள்ளவும் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து கவலைப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும் வழிவகுக்கும் கலாசார மாற்றம் ஏற்பட இவை உதவும்.
வழக்கமான வீட்டு அடிப்படையிலான கற்றல் ஏற்பாடு இந்த ஆண்டு முடிவில் அனைத்து தொடக்கப்பள்ளி, புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தப்படும். இது கற்றலில் மாணவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றார் திரு சான்.