பிரதமர் லீ: பருவநிலை மாற்றம், பசுமைப் பொருளியல் அம்சங்களில் இணைந்து பணியாற்றுவோம்
பசுமைப் பொருளியலிலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரிலும் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் அணுக்கமாக ஒத்துழைக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.
இஸ்தானாவில் நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் லீ, பருவநிலை மாற்றம் தொடர்பில் இரு நாடுகளும் ஒத்த கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
"நாம் வாழும் புவியில் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் இடங்களையும் பாதுகாக்க நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை," என்று திரு லீ வலியுறுத்தினார்.
திருவாட்டி ஆர்டன் மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இருநாட்டுத் தலைவர்களும் பேணிய தொடர்புக்காக பிரதமர் லீக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
"கடினமான காலங்களில்தான் ஒருவரது நண்பர்கள் யார் என்பது நினைவூட்டப்படும். அந்த வகையில், சிங்கப்பூர், நியூசிலாந்தின் மிக நெருக்கமான நட்பு நாடாகத் திகழ்கிறது," என்றார் திருவாட்டி ஆர்டன்.
கொவிட்-19 பரவலுக்குப்பின் சிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது.
ஆற்றல் மாற்றத் தொழில்நுட்பம், கரிமச் சந்தைகள், நீடித்து நிலைக்கத்தக்க போக்குவரத்து, கழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணைந்து பணியாற்றும் என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
கடந்த 2019ல் திருவாட்டி ஆர்டன் முதன்முறையாக சிங்கப்பூர் வந்திருந்தபோது, இரு நாடுகளும் மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவத்தில் கையெழுத்திட்டன. இந்நிலையில், அப்பங்காளித்துவத்தின் புதிய, ஐந்தாவது தூணாக பருவநிலை மாற்றமும் பசுமைப் பொருளியலும் விளங்கும்.
வர்த்தகம் மற்றும் பொருளியல், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவை மற்ற நான்கு தூண்கள்.
செய்தியாளர் சந்திப்பிற்குமுன், திருவாட்டி ஆர்டனுக்கு இஸ்தானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் லீயைச் சந்திக்குமுன் அதிபர் ஹலிமா யாக்கோபை அவர் சந்தித்துப் பேசினார்.
வட்டார, அனைத்துலக நிலவரங்கள் குறித்து தாங்கள் இருவரும் கலந்தாலோசித்ததாக பிரதமர் லீ தெரிவித்தார்.
தாங்கள் இருவரும் அனைத்துலகச் சட்டம் மற்றும் ஐநா சாசனத்தில் இடம்பெற்றுள்ள கொள்கைகளின் தீவிர ஆதரவாளர்கள் எனக் குறிப்பிட்ட திரு லீ, "அதனால்தான் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பிற்குச் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன," என்றும் சொன்னார்.
செய்தியாளர் சந்திப்பிற்குப்பின் பிரதமர் லீ, திருவாட்டி ஆர்டனுக்கு நண்பகல் விருந்தளித்தார்.
முன்னதாக, திருவாட்டி ஆர்டனைச் சிறப்பிக்கும்விதமாக, நேற்றுக் காலையில் புதிய வகை ஆர்க்கிட் மலருக்கு டெண்டிரோபியம் ஜெசிந்தா ஆர்டன் எனப் பெயர் சூட்டப்பட்டது.