சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த எண்ணிக்கையில் 40 விழுக்காட்டை எட்டியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் புதன்கிழமை (மே 4) இதைத் தெரிவித்தார்.
சாங்கி விமானநிறுவனங்களுக்கான விருது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
ஏப்ரல் 1ஆம் தேதி அன்று, சிங்கப்பூர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு தனது எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டது.
அதன் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மளமள என்று கூடிவிட்டது.
கடந்த மார்ச் மாதம், சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த அளவில் 18 விழுக்காட்டில் இருந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த பயணிகள் எண்ணிக்கையில் குறைந்தது 50 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்காகும்.
ஏப்ரலில் காணப்பட்ட பயணிகள் எண்ணிக்கையை அடுத்து சிங்கப்பூர் மிக விரைவில் அந்த இலக்கை எட்டும் சாத்தியம் உள்ளது.