அமெரிக்காவின் உத்தேச திட்டத்தில் ஆசியான் அதிக ஈடுபாடு தேவை என்றார் பிரதமர்
இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்காக அமெரிக்கா உத்தேசித்து உள்ள பொருளியல் திட்டத்தை சிங்கப்பூர் வரவேற்று உள்ளது.
அந்தத் திட்டத்தில் ஆசியான் அதிகளவு ஈடுபட வேண்டும் என்றும் சிங்கப்பூர் ஊக்கமூட்டுகிறது. வாஷிங்டனில் வியாழக்கிழமை அமெரிக்க அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்களிடம் இவ்வாறு பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
"அந்தத் திட்டம் எல்லாரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். பரந்த ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கண்கூடான நன்மைகளை அது ஏற்படுத்தித் தர வேண்டும்.
"மின்னிலக்கம், பசுமைப் பொருளியல், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அந்தத் திட்டம் உள்ளடக்கி இருக்க வேண்டும்," என்று 'இந்தோ-பசிபிக் பொருளியல் ஏற்பாடு' என்ற அமெரிக்காவின் அந்த யோசனை பற்றி கருத்து தெரிவித்தபோது திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார்.
"அந்த ஏற்பாட்டில் ஆசியான் அதிகளவு ஈடுபாடு கொள்ள நாங்கள் ஊக்கமூட்டுகிறோம்.
"அந்தத் திட்டத்தில் கலந்துகொள்ளும்படி ஆசியான் உறுப்பு நாடுகளை அமெரிக்கா நேரடியாக அழைக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்றார் திரு லீ.
அமெரிக்காவின் அந்தத் திட்டம் இன்னமும் முறையாகத் தொடங்கப்படவில்லை.
அமெரிக்க அதிபர் பைடன் இந்த மாத முடிவில் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு வருகை அளிக்க இருக்கிறார்.
அப்போது அந்தத் திட்டம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவுக்கான ஜப்பானிய தூதர் அண்மையில் தெரிவித்தார்.
இந்தோ-பசிபிக் வட்டார உத்தேச பொருளியல் திட்டம் பற்றி இதுவரை ஒரு சில விவரங்களே வெளியிடப்பட்டு இருக்கின்றன.
அந்த ஏற்பாடு வழிவழியான வர்த்தக உடன்பாடாக இருக்காது. அதிக சந்தை வாய்ப்புகளையும் அது உள்ளடக்காது என்று பைடன் நிர்வாகம் கோடிகாட்டி இருக்கிறது. மாறாக, அந்தத் திட்டம் நான்கு தூண்களைச் சிறப்பம்சங்களாகக் கொண்டிருக்கும்.
சுற்றுப்புறத்திற்குப் பாதகம் விளைவிக்காத எரிசக்தி, சேவை, பொருள் விநியோகக் கட்டமைப்புகள், ஊழல் ஒழிப்பு, நியாயமான, மீள்திறன்மிக்க வர்த்தகம் ஆகியவை அந்தத் தூண்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மின்னிலக்க ஆற்றலையும் வட்டார இணைப்பையும் தளவாடப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பலப்படுத்துவதில் அமெரிக்காவுக்கும் ஆசியானுக்கும் இடையில் ஒத்துழைப்பு இடம்பெறுவதை சிங்கப்பூர் வரவேற்பதாகவும் திரு லீ குறிப்பிட்டார். வட்டார மனிதவள மேம்பாட்டுக்கும் சிங்கப்பூர் ஆதரவு அளிக்கிறது என்றார் அவர்.
முன்னதாக திரு லீக்கும் இதர ஆசியான் தலைவர்களுக்கும் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் விருந்தளித்துச் சிறப்பித்தார்.
இதனிடையே, ஆசியான்-அமெரிக்கா இரு தரப்புகளும் வட்டார, உலகப் பிரச்சினைகள் பற்றியும் ஆசியான், அமெரிக்க எதிர்கால ஒத்துழைப்பு பற்றியும் தங்கள் கருத்துகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டதாக பிரதமரின் செய்தி துறைச் செயலாளர் சாங் லி லின் கூறினார்.
ஆசியான்-அமெரிக்கா திட்டங்களை குறிப்பாக, இந்த வட்டாரத்தில் வர்த்தகம், முதலீட்டை தொடர்ந்து ஆதரிக்கும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் திரு லீ கேட்டுக் கொண்டார்.
பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய புதிய துறைகளில் அமெரிக்காவும் ஆசியானும் தொடர்ந்து ஒத்துழைப்புக்கான வழிகளைக் காண்பதற்கு ஆதரவு அளிக்கும் படியும் அவர் தெரிவித்தார்.