மலேசியா அடுத்த வாரத்திலிருந்து கோழி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, போதிய அளவு கோழி கிடைக்குமா, விலை எந்தளவுக்கு உயரும் என வணிகர்களும் கோழி உண்பவர்களும் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு விலையும் உற்பத்தியும் நிலைப்படும் வரையில் மாதம் 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதியை ஜூன் 1 முதல் மலேசியா நிறுத்தும் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதனால் சிங்கப்பூரில் கோழி இறைச்சியின் விலை 10லிருந்து 30 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என்று சில கடைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேக்கா நிலைய ஈரச்சந்தையில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் 42 வயது அபு பக்கர் ஜன்னத்து கனி, "என்னிடம் கோழி வாங்குபவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்பதால், விலை ஏற்றத்தினால் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள்," என்றார். இவர் கடையில் இரு மாதங்களுக்கு முன்னர் $6.50 ஆக இருந்த முழுக் கோழியின் விலை 50 காசு உயர்ந்து தற்போது $7.00 ஆக உள்ளது.
மலேசியாவிலிருந்தே மொத்த கோழியையும் இறக்குமதி செய்யும் இவர், இனிமேல் வேறு இடங்களில் இருந்து கோழி வாங்க வேண்டும் என்றும் கோழி விலையை மேலும் உயர்த்த வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
கோழி விற்பனையாளர்களும் கோழி விற்கும் உணவகங்களும் வேறு இடங்களிலிருந்து புதிய கோழியைப் பெறுவதற்கு விநியோகிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
எனினும், மலேசியாவின் இந்த முடிவு தங்கள் வணிகத்தை கடுமையாகப் பாதிக்கும் என பல உண வகங்கள் கவலை தெரிவித்தன.
உணவு பானத் தொழில் ஏற்கெனவே கொவிட்-19 சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொருள் விலையேற்றம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது. அடி மேல் அடியாக கோழித் தடை மேலும் சிரமத்தைத் தரும் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோவுக்கு $1.20 வரை கோழி விலை உயரும் என்று விநியோகிப்பாளர்கள் கூறினர். தடை நடப்புக்கு வந்ததும் (ஜூன் 1) மூன்று மடங்காக உயரும் என்று எதிர்பார்ப்பதாக சிலர் கூறினர்.
"எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறையாவது கோழி சமைப்போம். கடந்த இரு மாதங்களில் ஒரு கோழியின் விலை $8 லிருந்து $12 ஆக உயர்ந்துவிட்டது. மலேசியாவிலிருந்து கோழி வராது என்பதால் விலை மேலும் கூடும். செலவைக் கட்டுப்படுத்த காய்கறிகளை உண்பதை அதிகரித்து கோழி சாப்பிடுவதைக் குறைக்கவேண்டும்," என்றார் முகம்மது ஜுபைர், 40.
மற்ற இறைச்சி வகைகளையோ வேறு நாடுகளிலிருந்து வரும் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியையோ வாங்கப்போவதாக வேறு சிலர் கூறினர்.
அதேநேரத்தில் புதிய கோழியைப் பெறுவது பிரச்சினையாக இருக்கும், ஆனால், உறைந்த கோழி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று உணவகங்களும் கோழி வியாபாரம் செய்பவர்களும் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரின் கோழி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கோழி இறக்குமதி செய்யப்படும் ஏனைய முக்கிய நாடுகளில் பிரேசில், அமெரிக்கா ஆகியவை அடங்கும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
உறைந்த கோழிகளின் இறக்குமதியை அதிகரிப்பது, சேமிப்பிலிருந்து கோழியை விநியோகிப்பது என மாற்று வழிமுறைகளைச் செயல்படுத்த பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அமைப்பு திங்களன்று கூறியது.
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் கோழி இறைச்சி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை களால் கோழி விலை கூடியுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் கோழி விநியோகத்தையும் கோழி இறைச்சியின் விலையையும் கட்டுப்படுத்துவதாகவும் அது குறித்து விசாரணை நடப்பதாகவும் மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ல் மலேசியா 49 மில்லியன் உயிர் கோழிகள், 42.3 டன் கோழி, வாத்து இறைச்சியை ஏற்றுமதி செய்தது. சிங்கப்பூர் சென்றாண்டு சுமார் 73,000 டன் கோழியை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தது. இது மொத்த இறக்குமதியில் சுமார் 34% ஆகும்.
கூடுதல் செய்தி: ஹர்ஷிதா பாலாஜி, விஷ்ணு வர்தினி