அண்மையில் இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று அந்நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
நாடு வரலாறு காணாத நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் சிக்கல்களுக்குத் தீர்வு காண ரணில் தகுதியானவர் என்ற அடிப்படையில் அவரிடம் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமர் பதவியை வகித்த ரணில், முதன்முறையாக நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
கொழும்பு அதிபர் மாளிகையில் நேற்றுக் காலை அதிபர் கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் நிதி அமைச்சராக திரு ரணில் பதவி ஏற்றுக்கொண்டார்.
மகிந்த ராஜபக்சே பதவி துறந்த பின்னர் ஐக்கிய அரசாங்கம் அமைக்கும் நோக்குடன் இரு வாரங்களுக்கு முன்னர் திரு ரணில் அழைக்கப்பட்டார். உடனடியாக பிரதமர் பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சியினரில் ஒருவர் நிதி அமைச்சராக நியமிக்கப்
படுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கட்சியினரிடம் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று இலங்கை ஊடகங்கள் கூறின.
திரு ரணில் நியமனம் மூலம் இரு வாரங்களாக நீடித்து வந்த இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, இன்னும் ஆறு வார காலத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக செவ்வாய்க்கிழமை திரு ரணில் கூறினார்.
உள்கட்டமைப்புத் திட்டங்
களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஈராண்டு நிவாரணத் திட்டங்
களுக்கு மாற்றிவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பொருளியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த செலவினத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மக்கள் நலத் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.