ஹர்ஷிதா பாலாஜி
இந்திய முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றையும் மரபுடைமையையும் அவர்களின் வெவ்வேறு பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
'சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள்: வரலாறு, மரபு, பங்களிப்பு' என்ற தலைப்பிலான இந்த நூலை 'ஏஎம்பி சிங்கப்பூர்' எனப்படும் முஸ்லிம் நிபுணர்கள் அமைப்பின் ஆய்வுக் கிளை வெளியிட்டுள்ளது.
முஹம்மது சாலே யூசுப் அங்கூலியா, கே.எம். ஒலி முஹம்மது, பேராசிரியர் அஹமது முஹம்மது இப்ராஹிம் போன்ற புகழ்பெற்ற இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கையையும் சாதனைகளையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
ஏஎம்பி சிங்கப்பூர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), தேசிய மரபுடைமைக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு வெளியிடப்படும் இந்நூலை $60க்கு நிகழ்ச்சியில் பலரும் வாங்கினார்கள். குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் இந்த நூல் விற்கப்படும்.
இந்திய முஸ்லிம் சமூகத்துக்கு உதவ $250,000 நிதி திரட்டு முயற்சியிலும் ஏஎம்பி சிங்கப்பூர் இறங்கியுள்ளது.
திரட்டப்படும் நிதி ஏஎம்பி சிங்கப்பூர், சிண்டா, மெண்டாக்கி நிர்வகிக்கும் கல்வி அறக்கட்டளை நிதிக்கும் இந்திய முஸ்லிம் சமூகத்துக்குச் சேவையாற்றும் அப்துல் கஃபூர் பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல், அங்கூலியா பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல், மலபார் பள்ளிவாசல், மௌலானா முஹம்மது அலி பள்ளிவாசல் ஆகியவற்றுக்கும் வழங்கப்படும்.
முன்ஷி அப்துல்லா போன்ற முன்னோடிகளின் பங்களிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு இருப்பதைப்போல மற்ற முன்னோடிகளைப் பற்றியும் ஆய்வு செய்து அவர்களின் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்த இந்த நூல் உதவும் என்றார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த அதிபர் ஹலிமா யாக்கோப்.
இந்திய முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட்டு, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவியதோடு, பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த கதிஜுன்னிசா சிராஜ் போன்ற முன்னோடிகளின் உழைப்பைப் பற்றியும் புத்தகம் விளக்குவதைச் சுட்டினார் திருவாட்டி ஹலிமா.
"இந்திய சங்கத்தை ஆரம்பித்த புகழ்பெற்ற வணிகர் திரு ராஜபாலி ஜுமாபாய், முன்னோடி மருத்துவரும் நகராட்சி ஆணையருமான டாக்டர் சிராஜுதீன் முன்ஷி, சிங்கப்பூரின் முதல் அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியான பேராசிரியர் அஹமது இப்ராஹிம் போன்றவர்களைப் பற்றி இந்நூலில் படித்தபின், வருங்காலத் தலைமுறையினரும் சமுதாயத்துக்குத் தொண்டாற்ற ஊக்குவிக்கப்படுவர் என நம்புகிறேன்," என்றார் திருவாட்டி ஹலிமா.