தடை செய்யப்பட்ட போதைப்
பொருள் பட்டியலிலிருந்து கஞ்சாவையும் கஞ்சா செடிகளையும் தாய்லாந்து நீக்கியதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் அந்தப் போக்கு குறித்து எச்சரித்து வருகின்றன.
இந்தோனீசியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தாய்லாந்து தூதரகங்கள் கஞ்சா மற்றும் அது தொடர்பான பொருள்களை கொண்டு வந்துவிட வேண்டாம் என்று தங்கள் நாட்டினருக்கு அறிவுறுத்தி உள்ளன.
சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் வெளிநாடுகளில் இருக்கும் தங்களது குடிமக்கள் கஞ்சாவைப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைவூட்டி உள்ளன.
“தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூருக்கு வெளியே பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டாலும் போதைப்பொருள் புழக்கக் குற்றத்தின்கீழ் அவர்கள் தண்டிக்கப்படுவர்,” என்று சிங்கப்பூரின் மத்திய போதைப்
பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) கூறியது.
போதைப்பொருள் புழக்கக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, $20,000 வரையிலான அபராதம் போன்றவை சிங்கப்பூரில் விதிக்கப்படலாம்.
மருத்துவ பலனை உள்ளடக்கிய மென்மையான போதைப்பொருள் கஞ்சா என்று வெளியாகும் கருத்து களை சிஎன்பி மறுக்கிறது. மன
நிலையைப் பாதிக்கிற அளவுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடியது கஞ்சா என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும் ஆய்வுகளும் தெரிவித்திருப்பதை சிஎன்பி நினைவூட்டியது.
கஞ்சா வைத்திருப்பதற்கும் கஞ்சா செடி வளர்ப்பதற்கும் இருந்த தடையை ஜூன் 9ஆம் தேதி தாய்லாந்து நீக்கியது. மருத்துவத்திற்கு கஞ்சாவை அதிகமாகப் பயன்படுத்தும் நோக்குடன் தடை விலக்கப்
படுவதாக அப்போது அது தெரிவித்தது.
ஆனால், உள்நாட்டிலும் உலக அளவிலும் அதற்கு எதிர்ப்பு நீடித்து வருகிறது. கஞ்சா தொடர்பிலான சட்டப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தெளிவாக இல்லாததால் தாய்லாந்துக்குள் குழப்பம் நீடிக்கிறது. சட்டவிதிகள் தெளிவின்மையால் அங்கு கஞ்சா இலைகள், மொட்டுகளின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.
அதேநேரம் கஞ்சாவைப் பயன்
படுத்தியதால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரைப் பற்றிய விவரம் வெளியானதும் பலதரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.
இளையர்களை இந்தப் பழக்கம் அதிகம் பாதிக்கும் என்பதால் வயது குறைந்தோர் கஞ்சாவைப் பயன்
படுத்தாமல் இருக்க சட்டத்தைக் கடுமையாக்குமாறு பொதுநலக் குழுக்கள் தாய்லாந்து அரசாங்கத்தை நெருக்கி வருகின்றன.