தாய்மொழிப் புழக்கத்தைப் பள்ளிகள் துடிப்புடன் ஊக்குவித்தாலும் இருமொழிப் புலமையை மாணவர்கள் பெறுவதற்கு மேலும் பெரிதளவிலான மொழிச் சூழல் முக்கியம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தாய்மொழியில் பேசுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தாய்மொழியை ஒரு தேர்வுப் பாடமாக மட்டும் பாராமல் அது வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் ஏற்ற ஒரு மொழியாக மாணவர்கள் கருதுவர் என்று சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் திரு சான் கூறினார்.
"பள்ளிச் சூழலையும் தாண்டி ஒரு மொழியைப் பயன்படுத்துபவரே அந்த மொழியில் சிறந்து விளங்குவார்," என்றார் அவர்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (எஸ்யுஎஸ்எஸ்) 22வது சீன மொழி மற்றும் கலாசார அனைத்துலக மாநாட்டில் திரு சான் இந்தக் கருத்துகளைக் கூறியிருந்தார்.
வெவ்வேறு நகரங்களில் இந்த மாநாடு கடந்த 21 ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
எஸ்யுஎஸ்எஸ்சின் கல்வித்துறை ஆலோசகரான பேராசிரியர் எடி குவோ, 82, "நமது பன்மொழித்தன்மையை சிங்கப்பூரர்கள் சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள். அது நம் அடையாளத்தின் ஓர் அங்கம். அது சிங்கப்பூருக்கே உரிய ஒன்று," என்றார்.
"இருப்பினும் இங்குள்ள நம் தாய்மொழிகளின் தரத்தை இன்னும் மேம்படுத்த முடியும். நமது இருமொழிக் கல்விக் கொள்கை என்பது முடிவுறாத ஒரு பயணம்," என்றார் பேராசிரியர் குவோ.
கொரிய, ஸ்பானிய மொழிகளைத் தம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொண்ட விதம் குறித்து திரு சான் பகிர்ந்துகொண்டார். இணையம், யூடியூப் தளம் போன்றவற்றைக் கொண்டு ஒரு மொழியைக் கரைத்துக் குடித்துவிடலாம் என்ற நிலை தற்போது உள்ளது.
மொழியில் நல்ல அடித்தளமிட்டு நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்று அவர் சுட்டினார்.
தாம் தொடக்கநிலை ஒன்றில் பயின்ற காலத்தில் ஆசிரியர் ஒருவர் தம்மைப் பாராட்டியதால் கணிதப் பாடத்தில் தமக்கு இருந்த தன்னம்பிக்கை கூடியதாகவும் அந்தப் பாடத்தில் பின்னர் சிறந்து விளங்கியதாகவும் திரு சான் குறிப்பிட்டார்.
"துருவங்களாகப் பிளவுபட்டுள்ள இந்த உலகில், சிங்கப்பூரர்களின் பன்மொழித்தன்மையே அவர்களுக்குச் சாதக நிலையைத் தரும். வெவ்வேறு நாடுகளுக்கிடையே மற்றும் அந்நாடுகளை இணைக்க அந்த நிலை அவர்களுக்குக் கைகொடுக்கும்," என்றார் அவர்.
நேற்றைய நிகழ்வில் 276 பக்கங்களுடைய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனை எழுதியவர்களுள் பேராசிரியர் குவோவும் ஒருவர். சிங்கப்பூரின் மொழித் திட்டமிடல், இருமொழிக் கல்விக் கொள்கை போன்ற விவகாரங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூலாசிரியர்களில் மற்றொருவர் எஸ்யுஎஸ்எஸ்சின் சீனத்துறைத் தலைவரான லுவோ ஃபுட்டெங்.
"சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய நாட்டில் நான்கு அதிகாரத்துவ மொழிகள் இருப்பதே, அனைத்து இனங்கள், கலாசாரங்களுக்கு அது அளிக்கும் மதிப்பைப் புலப்படுத்துவதாக உள்ளது. இருமொழிக் கல்விக் கொள்கையிலிருந்து ஒவ்வொரு சிங்கப்பூரரும் பலனடைந்துள்ளனர். இதனால் உலகில் எங்குச் சென்றாலும், எங்கு வேலை செய்தாலும் சாதகமான ஒரு போட்டித்தன்மை நிலை அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது," என்றார் 62 வயது பேராசிரியர் லுவோ.
இதற்கிடையே திட்டமிடப்பட்ட, முழுமையான முறையில் சிங்கப்பூரின் மொழிக் கொள்கைகள் அமைந்திருத்தல் அவசியம் என்று எஸ்யுஎஸ்எஸ்சின் தலைவரான பேராசிரியர் சியோங் ஹீ கியட் தெரிவித்தார். எளிதில் பிறர் உணர்ச்சிகளை பாதிக்கும் விவகாரங்கள் தலைதூக்கும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு விளக்கமளிப்பதாகவும் அந்தக் கொள்கைகள் இருக்க வேண்டும் என்றார் அவர்.
"வெவ்வேறு நாட்டினரிடையே, வெவ்வேறு மொழி பேசுவோரிடையே, நிலையற்றத்தன்மை இருப்பதை இன்றைய உலகில் காண்கிறோம். அதனால் பொருத்தமான கல்விக் கொள்கைகளை வகுக்க வேண்டிய சூழலும் தூண்டுதலும் ஏற்பட்டுள்ளது," என்றார் பேராசிரியர் சியோங்.