பொங்கோல் வட்டாரத்தில் உள்ள புதிய அக்கம்பக்க நிலையத்துக்குச் செல்பவர்கள் தங்கள் திறன்பேசி
களைப் பயன்படுத்தி அங்குள்ள சில்லறை வர்த்தகக் கடைகள் என்னென்ன பொருள்களை விற்கின்றன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதேநேரம், புதிய பொருள்களை விநியோகிப்பாளர்கள் இறக்கிவிடும் இடங்களிலிருந்து அவற்றை இயந்திர மனிதர்
களைக் கொண்டு கடைக்காரர்கள் பெற்றுக்கொள்வர். இதன்மூலம் பொருள்களைக் கடைக்காரர்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பான சோதனைமுறை நடத்தப்படுகிறது.
பொங்கோல் நார்த்ஷோர் வட்டார அக்கம்பக்க நிலையத்தில் (நார்த்ஷோர் பிளாசா) பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களில் இவை அடங்கும். புதிய நிலையத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று காலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
"அக்கம்பக்க நிலையம் என்கிற முறையில், பொங்கோல் வட்டாரத்தின் மற்ற பகுதிகளுடன் நார்த்ஷோர் பிளாசாவுக்கு நல்லதோர் இணைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பொங்கோல் வட்டாரக் குடியிருப்பாளர்கள் புதிய நிலையத்தில் ஒன்றுகூடலாம்," என்று திரு லீ தெரிவித்தார்.
பொங்கோல் வட்டாரத்தில் ஏற்கெனவே கடைத்தொகுதிகள், கடைகள் போன்ற வசதிகள் இருப்பதாகவும் அந்த வரிசையில் இந்தப் புதிய நிலையமும் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
"ஒன் பொங்கோல் சமூக மையம் அடுத்த மாதத்திலிருந்து படிப்படியாகத் திறக்கப்படும். அதில் உணவு அங்காடி நிலையம், குழந்தை
பராமரிப்பு நிலையம், மூத்தோர் பராமரிப்பு மையம் ஆகியவை இடம்பெறும்," என்று பொங்கோல் குடியிருப்பாளர்களிடம் திரு லீ பகிர்ந்துகொண்டார்.
புதிய பொங்கோல் சமூக மையத்தில் நூலகம், 700 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவு அங்காடி நிலையம் உட்பட பல்வேறு வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
நார்த்ஷோர் பிளாசாவில் உள்ள கடைகளுக்கு மட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. மின்தூக்கிகள், மின்படிகள் ஆகியவற்றிலும் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்காணிக்கவும் பழுதடைந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, நார்த்ஷோர் பிளாசாவில் தடையற்ற விவேக வாகன நிறுத்துமிடமும் உள்ளது. அதற்கு பார்க்கிங்@எச்டிபி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வாகனங்களின் எண் பலகை கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணங்கள் தானியக்க முறையில் கணக்கிடப்படும். பார்க்கிங்@எச்டிபி கைபேசி செயலி மூலம் வாகன ஓட்டுநர்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.