அங் மோ கியோ குழுத்தொகுதியில் ஈராண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இன்று(ஆகஸ்ட் 9) காலை நடைபெற்ற இந்நிகழ்வில் 1,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தெக் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற தேசிய தின நிகழ்ச்சியில் ஆடல், பாடல் படைப்புகளும் பலரின் மனத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கும் தேசிய தினப் பாடல் அங்கங்களும் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்கும் கலந்துகொண்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலாகலமாக தேசிய தினத்தைக் கொண்டாடியதில் குடியிருப்பாளர்கள் பலர் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். தேசிய கீதத்தைப் பாடும்போது சிலர் ஆனந்தக் கண்ணீரும் வடித்தனர்.
தெக் கீ தொடக்கப் பள்ளி, அங் மோ கியோ தொடக்கப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களின் ஆடல் படைப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. மக்கள் செயல் கட்சியின் ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர் பள்ளிக் கிளை ஒன்றைச் சேர்ந்த மழலையரும் ஆடல் அங்கங்களைப் படைத்தனர்.
சிறுவர்களுக்கான ஓவிய, கலை அங்காடிகள் நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பூரின் சின்னமாக விளங்கும் மெர்லயனின் சிறிய மாதிரி சிலைகளுக்கு சாயம் பூசுவது போன்ற நடவடிக்கைகள் அவற்றில் இடம்பெற்றன.
சிலர் காலை ஆறு மணிக்கெல்லாம் விழித்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாராயினர். நிகழ்ச்சியின் முதல் அங்கமாக கூட்டு உடற்பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூரின் இதர பகுதிகளிலும் தேசிய தின நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்றன.