இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின்போது ரெட் லயன்ஸ் வான்குடை வீரர் ஒருவர் மிகவும் மோசமாகத் தரையிறங்கியதில் அவருக்கு மருத்துவ முதலுதவி தேவைப்பட்டது.
எனினும் சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 3ஆம் வாரண்ட் அதிகாரி ஜெஃப்ரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இவ்வாண்டு ரெட் லயன்ஸ் வான்குடை சாகசத்தில் 10 சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் கடைசியாகத் தரையிறங்கியவர் 3ஆம் வாரண்ட் அதிகாரி ஜெஃப்ரி ஹெங்.
அவர் மிகவும் வேகமாக தரையிறங்கிய காட்சி நேரடியாக மிதக்கும் மேடையிலிருந்து பார்த்தவர்களையும் வீட்டிலிருந்து பார்த்தவர்களையும் பதைபதைக்க வைத்தது.
அவருக்கு மருத்துவ முதலுதவியாளர்கள் உடனடி மருத்துவ உதவி அளித்தனர்.
கிட்டத்தட்ட மாலை 6 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.