இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, 73, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்குச் சென்று உள்ளார். இங்கு அவரது குறுகியகால வருகை அனுமதி நேற்று காலாவதியானதைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூரைவிட்டுப் புறப்பட்டார். நேற்று கோத்தபாய சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்கு தனி விமானத்தில் புறப்பட்டார். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8 மணியளவில் அவர் பேங்காக் சென்றிருங்கினார்.
அரசதந்திர கடவுச்சீட்டுடன் தாய்லாந்துக்குள் நுழைந்த கோத்தபாய, அங்கு 90 நாள்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அவர் வேறெந்த நாட்டிலும் அடைக்கலம் நாடியுள்ளதாகத் தகவல் எதுவும் இல்லை.
மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்துக்குள் நுழைய கோத்தபாயவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். கோத்தபாய தாய்லாந்தில் தங்குவது தற்காலிகமானதே என்று தாய்லாந்து அரசாங்கத்திடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். கோத்தபாய தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதிக்குமாறு அவரது சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்து அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
இந்நிலையில், கோத்தபாய தாய்லாந்தில் தங்குவதற்கான விசா காலாவதியானவுடன், நவம்பரில் அவர் இலங்கைக்கு திரும்பக்கூடும் என்று டெய்லி மிரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறொரு நாட்டில் அவர் தற்காலிகமாகத் தங்கத் தேர்வு செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதே இதற்குக் காரணம்.
கோத்தபாய, கடந்த மாதம் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குப் புறப்பட்டதில் இருந்து மாலத்தீவு, சிங்கப்பூர் அரசாங்கங்களுடனும் இப்போது தாய்லாந்து அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் இருந்து வருகிறது. இந்த நாடுகளில் அவர் தற்காலிகமாகத் தங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்தது. எனினும், தாய்லாந்தில் தங்கிவிட்டு கோத்தபாய இலங்கைக்குத் திரும்புவார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கை குடிமகனான கோத்தபாயவுக்கு இலங்கையில் தங்குவதற்கு சட்ட ரீதியாக அனைத்து உரிமைகளும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
கோத்தபாயவும் அவருடைய மனைவியும் இலங்கையிலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கான செலவுகளை கோத்தபாயவும் அவருடைய மகன் மனோஜ் ராஜபக்சேவும் ஏற்றுக்கொண்டதாக டெய்லி மிரர் அறிகிறது. கடந்த மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு கோத்தபாய செல்வதற்கு ஆகாயப் படை விமானம் பயன்படுத்தப்பட்டது. அதைத் தவிர்த்து, வேறெந்த காரணத்திற்கும் அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என அறியப்படுகிறது.
ராஜபக்சே குடும்பத்துக்கு வலுவான வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளன. அக்குடும்பத்துக்கு தெரிந்த செல்வந்தர்கள் சிலர், வெளிநாடுகளில் கோத்தபாயவின் தங்குமிடச் செலவுகளை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. எனினும், தாய்லாந்தில் தங்குமிட வசதிகளைப் பொறுத்தமட்டில், கோத்தபாயவுக்கும் அவருடைய மனைவிக்கும் எவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
மத்திய கிழக்கில் அடைக்கலம் நாட கோத்தபாய தரப்பில் பலமுறை முயற்சி செய்யப்பட்டது. எனினும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் நவம்பரில் அவர் இலங்கைக்குத் திரும்ப முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.