சிங்கப்பூர் அரசாங்கம், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் வேலை செய்யும் வயதில் இருக்கும் 40% உடற்குறையுள்ளோரை வேலையில் சேர்க்க உறுதி பூண்டுள்ளது.
2020-2021க்கும் இடையே இந்த விகிதம் 30 விழுக்காடாக இருந்தது. நான்காவது மற்றும் அண்மைய வழிகாட்டித் திட்டத்தின் கீழ் இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
உடற்குறையுள்ளோருக்கு ஆதரவு வழங்கி அவர்களும் சமூகத்திற்கு பங்காற்றுவதை உறுதிப் படுத்தும் வகையில் நேற்று பெருந் திட்ட அறிக்கை வெளியானது.
'இஎம்பி 2030' எனும் அந்த பெருந்திட்டத்தில் அடுத்த எட்டு ஆண்டுகளில் இலக்கை அடை வதற்காக முதலாளிகள் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
உடற்குறையுள்ளோர் அதிகமானோர் வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வேலைகளை மாற்றியமைப்பது பரிந் துரைகளில் ஒன்று. குறுகிய நேர வேலை, தற் காலிகப் பணிகள் போன்றவை அவற்றில் சில.
நாற்பது விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இலக்கால் ஏறக்குறைய 10,000 உடற்குறையுள்ளோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்திட்டத்துக்காக பணியாற்றிய 27 உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவின் இணைத் தலைவரான சிங்கப்பூர் தொழில் சம்மேளனத்தின் உதவி தலைவர் கான் சியாவ் கீ, வேலை வாய்ப்புகளை வழங்குவது வெறும் பொருளியல் விவகாரமல்ல என்றார்.
சமூகப் பங்களிப்பையும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தையும் இது பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட் டார். பணிக்குழுவின் மற்றொரு இணைத் தலைவரான சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவாவும் திரு கானும் பாசிர் ரிஸில் நடந்த சமூக நிகழ்ச்சி ஒன்றில் அறிக்கையை வெளியிட்டனர்.
கடந்த 2021 ஜூலையில் கூடிய பணிக்குழு 300க்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோர், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் 29 பரிந்துரைகளுடன் பெருந் திட்டம் வெளியிடப்பட்டது.
அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்தின் சார்பில் அறிக்கையை பெற்றுக்கொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சூல்கிஃலி தெரிவித்தார்.
கல்வி, வேலை வாய்ப்பு, பராமரிப்பு ஆதரவு அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இது, குறிப்பிடத்தக்க அறிக்கையாகும். 2030ஆம் ஆண்டுவாக்கில் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் எப்படி இருக்கும் என்பதை இது விவரிக்கிறது.
"இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்கான வழியைக் காட்டுகிறது," என்று புதன்கிழமை அறிக்கையில் அமைச்சர் மசகோஸ் தெரிவித்து இருந்தார்.
8 சிறப்பு அம்சங்கள்
உடற்குறையுள்ளோருக்கு ஆதரவளிப்பதற்கும், சமூகத்திற்கு அவர்கள் பங்களிப்பை வழங்கு வதற்கும் நேற்று வெளியிடப்பட்ட 2030ஆம் ஆண்டு பெருந்திட்டத்தில் 29 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையின் எட்டு சிறப்பு அம்சங்கள்:
1. உடற்குறையுள்ளோரில் 40% வேலை வாய்ப்பு வழங்குவது. 2020 முதல் 2021 வரை 15 முதல் 64 வயதுடைய உடற்குறையுள்ளோரின் வேலை வாய்ப்பு விகிதம் 30.1% ஆக அதிகரித்தது. பெருந்திட்டம், 2030க்குள் இதை 40% ஆக உயர்த்த இலக்குக் கொண்டு உள்ளது.
2. மாற்று வேலை வாய்ப்பு களை உருவாக்குவது.
3. ஏற்கெனவே உள்ள 22 சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளுடன் மேலும் ஐந்து புதிய சிறப்புப் பள்ளிகளை அமைப்பது. அத்துடன் இரண்டு முன்கூட்டியே தலையிட்டு உதவும் மையங்கள்.
4.உடற்குறையுள்ளோருக்கான புதிய ஆதரவு மையங்கள்.
5. உடற்குறையுள்ளோர், சமூகத்தில் மற்றவர் உதவி இல்லாமல் சுதந்திரமாக வாழ உதவும் பணிக்குழு.
6. பாதசாரிகள் சாலை கடக்கும் இடங்களில் எந்நேரமும் ஒலிக்கக்கூடிய போக்குவரத்து சமிக்ஞைகள்.
7. உடற்குறையுள்ளோரிடையே மின்னிலக்கப் பயன்பாட்டை அதிகரித்தல்.
8. உடற்குறையுள்ளோரிடையே அறிவுக்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் பொது மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.