அனுஷா செல்வமணி
தாய்மொழி கற்பதில் இளம் தலைமுறையினருக்கு நாட்டத்தை ஏற்படுத்த புதிய, அதிக புத்தாக்க வழிகள் தேவை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
கல்வித் துறையினர், பெற்றோர், சமூகத்தினர் இதைச் சாதிக்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
புதிது புதிதாக தலைதூக்கும் போக்குகளைக்கொண்டு தாய்மொழியில் நாம் பிள்ளைகளிடம் நாட்டத்தை உருவாக்க முடியும் என்றார் அவர். வகுப்பறைக்கு அப்பாலும் தாய்மொழியைக் கற்பதை மேம்படுத்த நாம் அனைவருமே பங்காற்றலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தாய்மொழி புழங்குவதற்கான சூழல் மேம்பட வேண்டுமானால் அதற்கு வீட்டுச் சூழலும் சமூகச் சூழலும் முக்கியமானவை என்றார் அமைச்சர்.
தாய்மொழி பாடத்திட்டத்தைக் கல்வி அமைச்சு தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. தாய்மொழி அழகையும் கலாசாரத்தையும் பிள்ளைகள் போற்றி கற்று மேம்பட அமைச்சு தொடர்ந்து உதவும் என்றும் அமைச்சர் சான் கூறினார்.
கல்வி அமைச்சும் மூன்று தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்த தாய்மொழிக் கருத்தரங்கு 2022 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார்.
'களிப்பூட்டும் கண்டுபிடிப்புக்கான பூந்தோட்டம்' என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடந்தது.
நம் பிள்ளைகள், வாழ்வின் முதல் 15 ஆண்டுகளில் தாய்மொழியில் எப்படி தேர்ச்சி பெறுகிறார்கள் என்றில்லாமல் பள்ளி காலத்தைத் தாண்டி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எப்படி தாய்மொழியைப் புழங்கி புலமையுடன் உள்ளனர் என்பதே அளவுகோலாக இருக்கவேண்டும்.
வாழ்நாள் கற்றல் பயணத்தில் தாய்மொழியைக் கற்று புலமை பெற மணவர்களிடத்தில் தொடக்க காலத்திலேயே நம்பிக்கையை வித்திடவேண்டும் என்று திரு சான் வேண்டுகோள் விடுத்தார்.
மொழித் திறன் குறித்து பிள்ளைகளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால் அவர்களால் முடியாது என்ற எதிர்மறை எண்ணம் ஏற்படும் என்றும் அதற்குப் பதிலாக அவர்களின் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டினால் அவர்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதில் நம்பிக்கை பெற்று முயற்சியைத் தொடர்வார்கள் என்றும் அறிவுறுத்தினார்.
தாய்மொழிக் கற்றலை ஊக்குவிப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது என்ற அமைச்சர் சான், இல்லம்தோறும் இருமொழி வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க பெற்றோர்களை வலியுறுத்தினார்.
கருத்தரங்கில் பேசிய செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு தலைவருமான திரு விக்ரம் நாயர், பிள்ளைகள் விரும்பிப் பார்க்கும் நகைச்சுவை கேலிச்சித்திரங்களை தங்கள் தாய்மொழியில் பார்க்க வைக்கலாம் என்றும் கைப்பேசி பயன்பாடுகளில் தாய்மொழி சார்ந்த விளையாட்டுகளைப் பிள்ளைகள் விளை யாட பெற்றோர்கள் ஊக்குவிக்கலாம்.
சிறுவர்களிடம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேலும் தூண்ட தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்யும் பல்வேறு நடவடிக்கைகளில் பெற்றோர் பிள்ளைகளுடன் பங்கேற்றால் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்வார்கள் என்று திரு விக்ரம் கூறினார்.
நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொண்ட எவர்கிரீன் தொடக்கப்பள்ளியின் தாய்மொழிப் பிரிவின் தலைவரான திருமதி சரஸ்வதி, தமிழ் மாணவர்கள் முதலில் தமிழில் பேசுவதற்கு அச்சப்படக்கூடாது என்றும் பெற்றோரோடு ஆசிரியர்கள் என்றும் தொடர்பில் இருப்பார்கள் என்றும் கூறினார்.
தமிழ்மொழியைக் கற்பிப்பதற்குத் தயங்கும் பெற்றோர்கள், முதலில் தங்கள் பயத்தைப் போக்கி ஆசிரியர்கள் கற்பிக்கும் உத்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதோடு, ஆசிரியர்கள் வழங்கும் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டுமென்றார் திருமதி சரஸ்வதி.
மேலும் செய்தி பக்கம்-2ல்