ஒரே மக்களாக ஐக்கியமாகி எந்த கடுமையான சவால்களையும் நாம் சமாளித்து வெற்றிபெற முடியும் என்பதை கருத்தில்கொண்டே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ பெருந்திட்டத்தைத் தான் தொடங்கியுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
நம்முடைய சமூகக் கட்டமைப்புக்குப் புதுப்பொலிவை ஏற்படுத்தி சமூகத்தைப் பிணைப்புமிக்கதாகவும் வலுமிக்கதாகவும் வைத்து இருப்பதே அந்த திட்டத்தின் நோக்கம் என்று திரு வோங் கூறினார்.
இந்த முயற்சியில் தமிழர் பேரவை போன்ற சமூக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சருமான திரு வோங், நேற்று தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ‘வணக்கம், தேசிய தின வாழ்த்துக்கள்’ என்று தமிழில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
தமிழர் பேரவையின் 70வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையிலும் அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தில் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் ஈடுபாடுகொண்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒரே சமூகமாக நாம் எப்படி முன்னேற முடியும் என்பது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தை வெற்றிகரமான ஒன்றாகச் சாதிக்க ஒருவரின் பின்னணி, மொழி, சமயம் எப்படி இருந்தாலும் அவருக்கு ஏராள வாய்ப்புகளைக் கொண்ட சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதோடு, சிரமமான காலத்தில் நாம் கைவிடப்படவில்லை என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டிருக்கும் சிங்கப்பூரை நாம் நிலைநாட்டி வரவேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று திரு வோங் தெரிவித்தார்.
முன்னேறும் சிங்கப்பூர் பெருந்திட்டம், அரசாங்கம் மட்டும் செய்யக்கூடிய ஒன்றல்ல. அது நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாதிக்கும் ஒன்றாகும் என்று கூறிய திரு வோங், இதில் தமிழர் பேரவை, அதன் பங்காளிகள் போன்ற சமூக அமைப்புகளுக்கு முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது என்றார்.
எதிர்காலத்தை நோக்கும்போது கரும் மேகங்கள் சூழ்வது தெரியவருவதாக கூறிய துணைப் பிரதமர், அந்தச் சவால்களைச் சமாளிக்க நாம் ஆயத்தமாக வேண்டியது கட்டாயம் என்றார்.
இருந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய துணைப் பிரதமர், நாம் ஒரே மக்களாக ஐக்கியமாகச் செயல்பட்டால் எவ்வளவு கடுமையான சாவல்களையும் சமாளித்துவிடலாம் என்பதை கொவிட்-19 தொற்று நமக்கு எடுத்துக்காட்டி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழர் பேரவை மற்றும் அதன் பல பங்காளித்துவ அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறது என்று கூறிய திரு வோங், தனிச்சிறப்புமிக்க தமிழர்கள் சிங்கப்பூரின் வெற்றிக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள் என்றார். திருவாட்டி சரோஜினி பத்மநாதன் அவர்களில் ஒருவர் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
தியோங் பாரு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் துணைத் தலைவராக இருக்கும் திருமதி சரோஜினி பத்மநாதன், இவ்வாண்டின் தமிழர் பேரவையின் சமூக சேவை விருதினை பெற்றார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளியல் ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினருக்கும் பதின்ம வயதில் பாதை தவறி சென்ற இளம் பெண்களுக்கும் மேலும் உதவி தேவைப்படும் பல்வேறு சாராருக்கும் இவர் உதவி செய்து வருகிறார்.
தமிழர் பேரவை ஆற்றி வரும் தொண்டை துணைப் பிரதமர் திரு வோங் வெகுவாகப் பாராட்டினார்.
தமிழ்ச் சமூகத்தில் ஒற்றுமையைப் பேணி வளர்க்கும் அதேநேரத்தில், தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் போன்ற வெவ்வேறு சமய குழுக்களை ஒருங்கே கொணர்வதிலும் பேரவை சிறப்பான பணியை ஆற்றி உள்ளது என்று திரு வோங் கூறினார்.
தமிழர் பேரவையின் வரலாறு சிங்கப்பூரின் சொந்த வரலாற்றைப் பிரதிபலிப்பதாகவும் திரு வோங் குறிப் பிட்டார்.
பேரவையுடன், அதன் இளையர் பிரிவுடன், பேரவையின் இதர அமைப்புகளுடன் மேலும் பல ஆண்டுகளுக்குப் பங்காளித்துவ உறவுடன் சேர்ந்து செயல்பட்டு ஐக்கியமாக இன்னும் சிறந்த சிங்கப்பூரை சாதிக்க தான் விரும்புவதாக துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அன்றைய நாளில் தனித்தனியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தமிழர் அமைப்புகள், சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, தமிழ்ச் சமூகத்தை ஒன்றுபட்டு செயல்படும் பலமிக்க சமூகமாக்க 1952ஆம் ஆண்டில் தமிழர் பிரதிநிதித்துவ சபையை தமிழ் முரசு நிறுவனர் கோ.சாரங்கபாணி தொடங்கினார். பிரதிநிதித்துவ சபை பின்னாளில் தமிழர் பேரவை என பெயர் மாற்றம் கண்டது.