சுங்காய் உலு பாண்டான் கால்வாய்க்குள் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், கால்வாயில் தண்ணீர் ஓடுவதற்கு வசதியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறிய வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
கிளமெண்டியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத் தளத்தில் நேற்று முன்தினம் காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது உலு பாண்டான் கால்வாய்க்குள் மண் சரிந்தது. இதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவானது.
கிளமெண்டி அவென்யூ 6ல் கட்டப்பட்டு வரும் 'கிளமெண்டி நார்த்ஆர்க்' கட்டுமானத் தளத்தின் ஒரு பகுதி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில், மண் அல்லது தண்ணீர் புகுவதைத் தடுக்கும் தடுப்புச் சுவர் கட்டுப்பட்டு வந்தது. மேலும் அங்கு கூடைப்பந்து திடலையும் அமர்வதற்கான இடங்களையும் அமைக்கும் திட்டம் இருந்தது.
அடுத்த அறிவிப்பு வரும்வரை அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய பூங்காக் கழகம், கட்டட கட்டுமான ஆணையம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளின் உதவியுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மறுசீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார். அவர் அந்த வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
திருவாட்டி சிம், பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேற்றுக் காலை சென்று மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.
"வெள்ளம் ஏற்படும் அபாயம் பற்றி பொதுப் பயனீட்டுக் கழகம் ஆய்வு செய்யும். அதன் பின்னரே அருகில் உள்ள உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதையை மீண்டும் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்," என்று திருவாட்டி சிம் செய்தியாளர்களிடம் கூறினார்.
மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுங்காய் உலு பாண்டான் கால்வாயின் இரு கரைகளிலும் உள்ள பூங்கா இணைப்புப் பாதை மூடப்பட்டு உள்ளது.
குடியிருப்பாளர்கள் பலரும் நிலச்சரிவுக்குப் பிந்திய நிலவரத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது.
மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு உதவ சிறப்புப் பொறியாளர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவாட்டி சிம் தெரிவித்தார். அடுத்த வார தொடக்கத்தில் அத்திட்டம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"அத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் அதைக் கவனமாக ஆராய்வர். மறுசீரமைப்புப் பணிகள் கூடிய விரைவில் தொடங்கும் என நாங்கள் நம்புகிறோம்," என்றார் திருவாட்டி சிம்.