சிங்கப்பூரை பசுமை வளத்துடன் குளுமைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய பூங்காக் கழகமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் நாடு முழுவதும் பசுமைக் கூரை பேருந்து நிறுத்தங்களை அமைத்து வருகின்றன.
பயணிகளுக்கு வெப்பத்தை குறைத்து இன்னும் வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் அத்தகைய ஏற்பாடுகளை உருவாக்க தேசிய பூங்காக் கழகத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்து இருக்கிறது.
அத்தகைய கூரைகள் சுமார் 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைத்துவிடும் என்பது முதல் கட்ட ஆய்வு மூலம் தெரிந்தது.
மொத்தத்தில் 150 பேருந்து நிறுத்தங்களில் அல்லது சிங்கப்பூரின் 5,000 பேருந்து நிறுத்தங்களில் கிட்டத்தட்ட 3 விழுக்காட்டு நிறுத்தங்களில் அத்தகைய கூரைகள் அமைக்கப்படும். புதிய பேருந்து நிறுத்தங்களும் மேம்பாட்டுக்கு பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுத்தங்களும் இதில் உள்ளடங்கும்.
இந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி கிட்டத்தட்ட 30 பேருந்து நிறுத்தங்களில் பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டு உள்ள.
அடுத்த இரண்டாண்டுகளில் கட்டம் கட்டமாக இதர நிறுத்தங்களில் பசுமைக் கூரைகள் அமைக்கப்படும் என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜாலான் புக்கிட் மேரா (புளோக் 28க்கு எதிரே), ஹெண்டர்சன் ரோடு (புளோக் 55க்கு எதிரே), அங் மோ கியோ அவென்யூ 1 (புளோக் 248ல்) உள்ள பேருந்து நிறுத்தங்களில் பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சிராங்கூன் சென்ட்ரலில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் இந்த வசதி உள்ளது.
கடந்த 2019ல் கிட்டத்தட்ட 10 அரசு பேருந்துகளில் பசுமை கூரை தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
அத்தகைய தோட்டங்கள் மூலம் பேருந்தில் உள்ளே வெப்பநிலை குறையுமா என்பதை பரிசோதிப்பதற்காக தெமாசெக் அறநிறுவன உதவியுடன் மூன்று மாதம் ஆய்வு நடத்தப்பட்டது.