எலிசபெத் டிரஸ்ஸை பிரிட்டனின் புதிய பிரதமராக இங்கிலாந்து அரசி எலிசபெத் நேற்று அதிகாரபூர்வமாக நியமித்தார். மில்லியன் கணக்கான குடும்பங்கள், வணிகங்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் பொருளியல் மந்தநிலை, எரிசக்தி நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு வழிநடத்தும் பணியில் அவர் டிரஸ்ஸை அமர்த்தினார்.
ஆறு ஆண்டுகளில் நான்காவது கன்சர்வேட்டிவ் பிரதமரான திருவாட்டி டிரஸ், 96 வயதான அரசியாரால் அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். கொந்தளிப்பான மூன்றாண்டுகாலத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட திரு போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிசக்தி செலவினங்களை சமாளிக்க ஏறக்குறைய 100 பில்லியன் பவுண்டுகள் (S$163 பில்லியன்) வழங்கும் அதேவேளையில், வரிக்குறைப்பு மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அவரது திட்டம் ஏற்கெனவே நிதிச் சந்தையை ஆட்டம் காணவைத்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளில் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் போட்டியாளரான இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்கை தோற்கடித்த பின்னர், தனது முன்னோடிகளைவிட பலவீனமான நிலையில் பிரிட்டனின் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் டிரஸ்.
திருமதி மார்கரெட் தாட்சர், திருமதி தெரசா மே ஆகியோருக்குப் பிறகு பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராகியுள்ளார் 47 வயதான திருவாட்டி ட்ரஸ்.
'யுகவ்' எனும் செயலி நேற்று முன்தினம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜான்சனைவிட லிஸ் டிரஸ் சிறந்த பிரதமராக இருப்பார் என்று பிரிட்டிஷ் மக்களில் எழுவரில் ஒருவரே கூறியுள்ளார். கிட்டத்தட்ட கால்வாசி மக்கள் அவர் மோசமாக செயல்படுவார் என்று நினைக்கிறார்கள்.
10, டவுனிங் ஸ்திரீட் அதிகாரபூர்வ பிரதமர் இல்லத்தில் நேற்றுக் காலையில் கூடிய செய்தியாளர்கள், அரசியல்வாதிகளிடம் பிரியாவிடை உரையாற்றிய திரு ஜான்சன், நாடு ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். பின்னர் தமது பதவி விலகல் கடிதத்தை அரசியாரிடம் கொடுக்க ஸ்காட்லாந்து சென்றார்.
பிரதமர் லீ சியன் லூங், பிரிட்டனின் பிரதமராகப் பதவி ஏற்றிக்கும் லிஸ் டிரஸுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.