அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த வாரம் ஐநா கூட்டம் நடக்கிறது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த விவகாரம், அதனால் உலகளவில் ஏற்பட்ட உணவு நெருக்கடி பற்றி அந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் விவாதிக்கிறார்கள்.
என்றாலும் அந்த ஐநா கூட்டத்தின் மூலம் உக்ரேன் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை. மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தின் மூலம் உக்ரேன் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்படும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் கூறினார்.
அந்தப் பிரச்சினை காரணமாக புவிசார் அரசியல் சூழலில் கெடுபிடிப் போருக்குப் பிறகு ஒருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக திரு குட்டரஸ் கூறினார்.
உலகம் போர், பருவநிலை, ஏழ்மை, பசி, ஏற்றத்தாழ்வு முதலான இதர பல பிரச்சினைகளையும் எதிர்நோக்குகிறது. ஆனால், உக்ரேன் பிரச்சினையால் இதரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடிய வில்லை என்று அவர் எச்சரித்தார்.