சிங்கப்பூரில் இணையத்தில் இடம்பெறக்கூடிய பாதகமான அம்சங்களைச் சமாளிக்கத் தோதாக அடுத்த ஆண்டு புதிய விதிகள் நடப்புக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இணையத் தகவல்களை உள்ளூர் மக்களை எட்டும் வழிகளைக் கூடுமானவரை குறைப்பது விதிகளின் நோக்கம். இணையத் தகவல்களை வடிகட்டுவது, பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்க வசதி முதலானவை அவற்றில் அடங்கும்.
இணையப் பாதுகாப்புக்கான நடைமுறை நியதி, சமூக ஊடகச் சேவைகளுக்கான உள்ளடக்க நியதிகள் ஆகியவற்றின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்தப் புதிய விதிகளுக்குப் பொதுமக்களின் ஆதரவு கிடைத்து உள்ளது.
தொடர்பு, தகவல் அமைச்சுடன் ஒருமாத காலம் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் பொதுமக்களின் ஆதரவு தெரியவந்தது. புதிய நியதிகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பிறகு அவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சுடன் கூடிய கலந்துரையாடல்கள் ஆகஸ்டில் முடிந்தன. பெற்றோர், இளையர், கல்வித்துறையினர், சமூக, தொழில்துறையினர் உள்ளிட்ட 600 பேருக்கும் மேற்பட்டோர் அவற்றில் கலந்து கொண்டனர்.
பொதுவாக புதிய விதிகளை அவர்கள் ஆதரித்தனர் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் இடம்பெறக்கூடிய ஆறு வகை தகவல்களுக்குப் பாதுகாப்புத் தரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பொதுவாக பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பாலியல் தகவல்கள்; வன்செயல் தகவல்கள்; சுய பாதிப்புத் தகவல்கள்; இணையச் சட்டாம்பிள்ளைத் தகவல்கள்; பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள்; பாலியல் மற்றும் திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்களுக்குத் தோதான தகவல்கள் ஆகியவை அந்த ஆறு வகை தகவல்கள் ஆகும்.
சிங்கப்பூர் கையாளும் அணுகுமுறை, விளைவுகளை அடிப்படையாகக் கொண் டது என்பதை தொழில்துறையினருக்கு அமைச்சு விளக்கியது.
குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்முறை மாதிரிகளைக் கவனத்தில்கொண்டு, அத்தகைய நிறுவனங்களின் சேவைகளில் இடம்பெறக்கூடிய பாதகமான அம்சங்களைச் சமாளிக்க மிகவும் பொருத்தமான தீர்வுகளை உருவாக்கி, அவற்றை அமல்படுத்துவதற்குத் தோதாக கொஞ்சம் நீக்குப்போக்கை அத்தகைய நிறுவனங்களுக்கு அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இணையத்தில் இடம்பெறக்கூடிய பாதக தகவல்கள் பற்றி பயனீட்டாளர்கள் புகார் தெரிவிக்கும்போது அத்தகைய தகவல்களை எட்டுவதற்கான வழிகளை இணையத்தளங்கள் அடைத்துவிட வேண்டிய சூழல் வரலாம். அல்லது வாடிக்கையாளரின் ஈடுபாட்டை மட்டுப்படுத்தக்கூடிய நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.