சீனாவுடன் மோதல் போக்கை தவிர்த்துக்கொள்ளும் வகையில் அந்த நாட்டுடன் கூடிய தகவல் தொடர்புக்கான வழிகள் எப்போதுமே திறந்திருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆசியத் தலைவர்களிடம் நேற்று உறுதி கூறினார்.
உலகத் தலைவர்களின் மூன்று உச்சநிலை மாநாடுகளில் ஒன்று நேற்று முடிவடைந்த நிலையில், அதிபர் பைடன் அந்த உறுதிமொழியை அளித்தார்.
கம்போடியாவில் கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் பேசிய அதிபர், சீனாவுடன் அமெரிக்கா போட்டியிடும்; சீனாவின் மனிதஉரிமை விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக அமெரிக்கா பேசும் என்று தெரிவித்தார்.
அதேவேளையில், தைவான் நீரிணையில் அமைதி முக்கியமான ஒன்று என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். தென்சீனக் கடலில் போக்குவரத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியதும் முக்கியம் என்றார் அவர்.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்த காரியம் நியாயமற்றது, கொடூரமானது என்று அவர் வர்ணித்தார்.
அதேபோல, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை அதிபர் பைடன் குறைகூறினார்.
ஆசியான் அமைப்புடன் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் அமைதித் திட்டத்தை மியன்மார் ராணுவத் தலைவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
சீனா பற்றி கருத்து கூறிய அதிபர், அமெரிக்கா சீனாவுடன் முழுமூச்சாகப் போட்டியிடும் என்றார். அதேநேரத்தில் தகவல் தொடர்புக்கான வழிகளை அது திறந்து வைத்திருக்கும்.
இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி மோதலில் முடிந்துவிடாது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும் என்று அதிபர் அந்த மாநாட்டில் கூறியதாக அறிக்கை ஒன்றில் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
தென்கிழக்கு ஆசியா இந்த வாரம் இந்தோனீசியாவின் பாலி தீவில் ஜி20 உச்சநிலை சந்திப்பை நடத்துகிறது. அதற்கு முன்னதாக அதிபர் பைடன் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பு பற்றி கருத்து கூறிய அமெரிக்க அதிபர், முன்பைவிட வலுவான நிலையில் தான் சீன அதிபரைச் சந்தித்துப் பேசப்போவதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் பைடனின் ஜனநாயகக் கட்சி மேலவையைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து இருக்கிறது.
இந்த வெற்றியின் பின்னணியில் தான் முன்பைவிட பலத்துடன் சீன அதிபருடன் பேச்சு நடத்தப் போவதாக அதிபர் பைடன் தெரிவித்தார்.
அதிபர் பைடன், கம்போடியாவில் ஆசிய தலைவர்களுடன் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டார்.
அமெரிக்க அதிபராக திரு பைடன் பதவி ஏற்றதற்குப் பிறகு முதன் முறையாக இந்தோனீசியாவில் ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி சீன அதிபரை நேருக்கு நேராக இன்று சந்திக்கிறார்.
அதிபர் பைடன் பதவி ஏற்றது முதல் இரு நாட்டு உறவு சீர்கெட்டு வந்திருக்கிறது.
பொருளியல் போட்டி, மனித உரிமை விவாரங்கள், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் ஆகியவை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட உறவில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.
இதனிடையே, பாலி மாநாட்டில் உக்ரேன் விவகாரம் பெரிதும் விவாதிக்கப்படும் அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேங்காக்கில் நடக்கும் ஏபெக் மாநாட்டிலும் அந்த விவகாரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
உலக பருவநிலை கடப்பாடுகள், உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் விவகாரம், தைவான் நீரிணை பதற்றம், தென்சீனக் கடல் நிலவரங்கள், வடகொரிய ஏவுகணை மிரட்டல் ஆகியவையும் அந்த மாநாடுகளில் முக்கிய கவனம் செலுத்தப்படும் அம்சங்களாக இருக்கும் என்று தெரிகிறது.