வினோத் கருப்பையா
சிங்கப்பூரின் மூத்த ஊடகவியலாளரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான திரு எம்.கே. நாராயணன் நேற்று தமது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86.
‘மர்மக் கதை மன்னன்’ என புகழப்படும் திரு நாராயணன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள், ஒலிபரப்புத் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் என சிங்கப்பூர் தமிழ் ஒலிபரப்பு வரலாற்றில் பெயர் பதித்தவர்.
1960களில் வானொலிக்காக இவர் எழுதித் தயாரித்த ‘மர்ம மேடை’ நாடகங்கள் பின்னர் அது புத்தகமாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளியானது.
மகாபாரதம் இவரது மற்றொரு முத்திரைப் படைப்பு. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து 1980களில் வானொலிக்காக எழுதித் தயாரித்த மகாபாரதம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
எழுத்தாளர், நாடகக் கலைஞர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்ட திரு நாராயணன், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ பற்றிய ஒரு வரலாற்று நூலையும் 2000ஆம் ஆண்டில் வெளியிட்டார். சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர்.
சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தின் தமிழ் வானொலியில் 1962ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த திரு நாராயணன், எழுத்து, நடிப்பு, தயாரிப்பு என பல பணிகளிலும் ஈடுபட்டார். 1981ல் ஒலிவழி நான்கின் (இன்றைய 96.8) தலைவரான இவர் 1994ல் ஓய்வுபெற்றார். இவர் காலத்தில் ஒலிவழி நான்கு ஒலிக்களஞ்சியம் எனப் பெயர் மாற்றம் கண்டது.
“சாங்கி தமிழ்ப் பள்ளிக்காக பாடுபட்டவர் நாராயணன். அன்பான மனிதர், பழக இனிமையானவர். சமூகத்திற்காக நல்ல நாடங்கள் எழுதியுள்ளார். இவரின் மறைவு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் உலகத்திற்கு பேரிழப்பு,” என்றார் அவருடன் ஏறக்குறைய 22 ஆண்டுகள் பணிபுரிந்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வம்.
தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி ஒலி 96.8 வானொலியில் பணியாற்றியபோது திரு நாராயணன் அப்பிரிவின் தலைவராக இருந்தார்.
“1984ல் மனோன்மணீயம் நாடகத்தை மேடையேற்றினார். பின்னர் மாபெரும் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மகாபாரதத்தை அறுபத்து நான்கு பாகங் களாக வானொலி நாடகமாக தயாரித்து சாதனை படைத்தார். அவர் தயாரித்த மர்ம மேடை எனும் திகில் நாடகத் தொடர் என்றென்றும் அவர் புகழ்பாடும்,” என்றார் திரு பழனிச்சாமி.
சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் 91 வயது பி.கிருஷ்ணன், திரு நாராயணனுடன் ஒரே ஆண்டில் சிங்கப்பூர் வானொலியில் சேர்ந்தவர். “பல புதிய நிகழ்ச்சிகளைப் படைத்து குறுகிய காலத்தில் மக்கள் மனங்களில் வானொலிக்கு இடம்பிடித்துக் கொடுத்தவர். இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும் மணக்குவியல் என்னும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வானொலி நிகழ்ச்சி சிங்கப்பூரின் பெருமையைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றது,” என்றார் மூத்த வானொலிக் கலைஞருமான திரு பி.கிருஷ்ணன்.
மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகள், பேரப் பிள்ளைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு எண் 21 லெண்டோர் கிரசென்ட் வட்டாரத்தில் திரு நாராயணனின் இறுதிச்சடங்கு இடம்பெறும். மாலை 4.15க்கு மண்டாய் தகனச் சாலைக்கு அவரது நல்லுடல் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.