இப்போது அரசியலில் இல்லாமல் அரசியலைக் கடந்து சேவையாற்ற முடியும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்திருக்கிறார்.
அடுத்துவரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் முடிவு அவசரமாக எடுக்கப்பட்டதில்லை என்றாலும் அம்முடிவு கடினமாக இருந்ததாக திரு தர்மன், தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமையன்று கூறினார்.
சந்திப்பில் திரு தர்மனுடன் அவரது மனைவி ஜேன் யுமிக்கோ இட்டோகி இருந்தார்.
“கொள்கை வகுப்பாளராக இருப்பது எனக்குச் சுமுகமாக இருப்பதால் இதனைக் கடினமான முடிவு என்றேன். ஆனால் நாம் அடுத்து அடியெடுத்து வைக்கும் காலம் மிகவும் மாறுபட்டது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் மக்களிடையே இருக்கும் கருத்துகளிலும் விருப்பங்களிலும் கூடுதல் வேறுபாடுகள் இருப்பதைச் சுட்டிய திரு தர்மன், சிங்கப்பூரின் மக்கள்தொகை பக்குவமடைவதால் அவை எதிர்பார்க்கப்படவேண்டியவை என்றார்.
இவற்றை இந்நாட்டின் நான்காம் தலைமுறை தலைமைத்துவம் மிகச் சிறப்பாகக் கையாண்டு சிங்கப்பூரின் நம்பிக்கையைச் சம்பாதிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
இருந்தபோதும் அனைத்துலக அளவில் நடப்பதுதான் உண்மையில் கவலை அளிப்பதாகக் கூறிய திரு தர்மன், தெரிந்த அபாயங்களும் தெரியாத அபாயங்களும் இருப்பதைச் சுட்டினார்.
அடிப்படையில் உலகச் சூழல் உடைந்த, நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
கிருமிப்பரவல் மட்டுமின்றி பன்னாட்டு மோதல்கள், பதற்றம், சில நேரங்களில் போர் போன்ற நெருக்கடிகள் உருவாவதற்கான சூழல் நிலவுவதாகக் கூறினார்.
இவற்றுக்கெல்லாம் மத்தியில் சிங்கப்பூர் தன்னை விட்டுக் கொடுக்காமல் நிற்கவேண்டும் எனக் குறிப்பிட்ட திரு தர்மன், அவ்வாறு நின்றோமானால் மக்கள் ஒன்றாக இருப்பர், சிங்கப்பூரர்களாகச் சிறப்புடன் திகழ முடியும், சிங்கப்பூரர்களாக இருப்பது குறித்த நல்லுணர்வு நீடிக்கும் எனக் கூறினார்.
ஜூரோங் குழுத்தொகுதியில் தாம் பதவி விலகிய பிறகு, மக்கள் சந்திப்புகளுக்கான பொறுப்புகளைத் திரு ஷோன் ஹுவாங் கவனித்துக்கொள்வார் எனத் திரு தர்மன் குறிப்பிட்டார்.
மற்ற பொறுப்புகளை ரஹாயு மஹ்ஸாம், டாக்டர் டான் வூ மேங், திரு சியே யவ் சுவென் ஆகியோர் பகிர்ந்துகொள்வார்கள் என திரு தர்மன் சொன்னார்.