கௌசியுங் சிட்டி: தைவானின் கௌசியுங் சிட்டி நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் திக்குமுக்காடி ஓட ஆரம்பித்தனர். அதனால் சிலர் காயமுற்றனர்.
அந்த நிகழ்ச்சி டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கௌசியுங்கின் ‘டிரீம்’ பேரங்காடிக்கு வெளியே நடைபெற்றதாக யுனைடெட் டெய்லி நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 340,000க்கும் அதிகமானோர் அந்தப் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டனர்.
கூட்டத்தில் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் சிறு கத்தியை வெளியே எடுத்ததாக வதந்திகள் பரவின. அதனைத் தொடர்ந்து பலர் அனைத்துத் திசைகளையும் நோக்கி ஓடுவதை சைனா டைம்ஸ் வெளியிட்ட காணொளியில் காணமுடிந்தது.
அனைவரும் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டிருந்ததாகவும் பலர் கீழே விழுந்ததாகவும் யுனைட்டெட் டெய்லி நியூஸ் தெரிவித்தது.
“என் முன்னால் நிறைய பேர் இருந்தார்கள். அனைவரும் ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர்,” என்று அங்கிருந்த ஒருவர் கூறினார்.
சம்பவத்தின்போது காயமடைந்த சிலரும் நிலைமை குறித்து பதற்றமடைந்த சிலரும் அருகில் இருந்த மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கௌசியுங் சிட்டி அரசாங்கத் தகவல் பிரிவின் தலைமை இயக்குநர் சியாங் பின் ஹோ கூறினார்.
பலரின் கைகளும் கால்களும் காயமுற்றதாகவும், பயத்தில் ஒரு சிறுமி உரக்க அழத் தொடங்கியதாகவும் யுனைடெட் டெய்லி நியூஸ் தெரிவித்தது.
நிகழ்ச்சி 12 நிமிடங்களுக்குத் தடைபட்டது. நிலைமையை விசாரிக்க காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். இருப்பினும், சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
சம்பவ இடத்தில் இருந்தவர்களோடு பேசிய பிறகு, அந்த ஆடவர் வெளியில் எடுத்தது ஒரு பேனா என்றும் அது கத்தியன்று என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.