லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது அல்லது வெளியேறுவது குறித்து முடிவு எடுக்க பிரிட்டிஷ் மக்கள் நேற்று வாக்களித்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு நேற்று சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேற்றிரவு சுமார் 7 மணி நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பிய நாடாக பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று ஆதரிப்பவர்கள் 52 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலை வகித்துக் கொண்டிருந்ததாக கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
பிரிட்டன் ஒன்றியத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று ஆதரிப்போர் 86 விழுக்காடு வாக்குகளுடன் வெல்வர் என்று 'பெட்ஃபேர்' நிறுவனம் முன்னுரைத்துள்ளது. பொது வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்றைய தினத்தில் கனமழை காரணமாக தலைநகர் லண்டனில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் காலை நேரத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. வானிலை ஒத்துழைக்காதபோதிலும் சில வாக்குச் சாவடிகளில் பிரிட்டிஷ் மக்கள் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப் பட்டது. இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்களிக்க ஏறத்தாழ 46.5 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு பிரிட்டிஷ் வாக்கெடுப்பில் இவ்வளவு அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கெடுப்பின் முடிவு இன்று பிற்பகல் தெரிந்துவிடும்.