கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் திரு மகாதீர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்வாரின் இரண்டாவது மகள் நூருல் நுகா வலியுறுத்தியுள்ளார். தன் தந்தை மீது 1998ஆம் ஆண்டு சாட்டப்பட்ட ஓரினப் புணர்ச்சி மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகளுக்காகவும் மற்ற செயல்களுக்காகவும் திரு மகாதீர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நூருல் வலியுறுத்தியதாக மலாய் மெயில் இணையப்பக்கத் தகவல் கூறியது.
"கடந்த 18 ஆண்டுகளாக என் தந்தை அனுபவித்த துன்பங்களை நேரில் பார்த்த ஒரு மகள் என்ற முறையில் திரு மகாதீர் என் தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திரு மகாதீர் அவரது சொந்த ஆதாயத்திற்காக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அவை என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்," என்று நூருல் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரு மகாதீரும் திரு அன்வாரும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து நூருல் இவ்வாறு கருத்துரைத் துள்ளார். இதற்கிடையே மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், திரு அன்வார் இப்ராகிமை விடுவிக்க 'பார்டி பெரிபூமி' கட்சி ஒத்துழைக்கும் என்றும் ஆனால் அவ்வாறு செய்வதற்கு தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அன்வாரை விடுவிக்க பலர் தமக்கு கோரிக்கை விடுத்து வருவதாகவும் யாசின் கூறியுள்ளார்.