நியூயார்க்: பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதால் பலர் காயமுற்றதாகவும் முக்கிய ரயில் பாதையான அதன் இரு வழிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் நியூயார்க் போலிசார் தெரிவித்துள்ளனர். நியூ ஹைட் பார்க் அருகே உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் 'லாங் ஐலாண்ட்' பயணிகள் ரயில் வேறொரு ரயிலின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. விபத்தில் சுமார் 100 பேர் காயமுற்றிருக்கலாம் எனவும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனவும் போலிஸ் பேச்சாளர் மேரி வெர்னா கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
நியூயார்க் நகரை இணைக்கும் இந்த முக்கிய ரயில் தடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அத்தடத்தின் இரு வழிகளிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதனால், அதிக எண்ணிக்கை யிலான பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நியூயார்க் நகரின் மேற்கு புறநகருக்குச் சேவை வழங்கும் ரயில் ஒன்று நியூஜெர்சியின் நிலையம் ஒன்றில் மோதியதில் ஒருவர் பலியானதும் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றதும் குறிப் பிடத்தக்கது.