தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் காலமானதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசியார், அந்நாட்டுப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர். மறைந்த மன்னர் பூமிபோல் தனிச்சிறப்பு மிக்கவர் என்றும் தாய்லாந்து மக்களுக்காக அயராது பணியாற்றியவர் என்றும் சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் தாய்லாந்து அரசியார் சிரிகிட்டிற்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மறைந்த மன்னர் பூமிபோல் கருணை மிக்க மன்னராக விளங்கியதாகவும் மக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்தவர் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தாய்லாந்து பிரதமருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நட்புறவை வளர்ப்பதில் மன்னர் பூமிபோல் ஆற்றிய பணியை திரு லீ பாராட்டியுள்ளார். மன்னர் பூமிபோல் தமது நேரத்தையும் சக்தியையும் மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும் அவரை தாய்லாந்து மக்கள் கருணை மிக்க மன்னராக எப்போதும் நினைவில் வைத்திருப்பர் என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தாய்லாந்து வெளியுறவு அமைச்சருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.